ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பதிகங்கள்

Photo

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

English Meaning:
To contain body`s harassing senses five
In elements five,
To contain elements five
In organs cognitive internal,
To contain cognitive organs internal
In their Tanmatras
To contain the Tanmatras
In the Being Uncreated
That, verily, is Dharana
In stages practised.
Tamil Meaning:
தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.
Special Remark:
அரித்த உடல் - பசி பிணி மூப்புக்களால் அரிக்கப்பட்ட உடம்பு. இவ்வாறு கூறியது, `உதிரம் முதலிய தாதுக்களால் ஆகிய தாத்துவ தூல தேகம்` என்பது விளங்குதற்கு. பொருத்த - ஓன்றாக்க; `ஒடுக்க` என்றபடி. உதிரம் முதலிய தாதுக் களாலான தேகம் ஐம்பூதங்களின் காரியமாகலின், அஃது ஐம் பூதங்களில் ஒடுங்கு வதாயிற்று. ஒடுக்குதல், இங்கு, `அவற்றின் காரியம்` என்று உணர்தல். சத்தாதி - சத்தம் முதலிய தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளின் காரியங்களே பூதங்களாதலின், அவை தன்மாத்திரைகளுள் ஒடுங்கு வனவாம். மனாதி ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணங்கள். சித்த ஆதி - சித்தமாகிய முதல்; சித்தமாயும், குண தத்து வமாயும் நிற்பது மூலப் பிரகிருதியேயாகலின், ``சித்தாதியிற் செல்ல`` என்றது, ``மூலப்பிரகிருதியில் ஒடுங்க`` என்றதாம். மனம் அகங் காரத்திலும், அகங்காரம் புத்தியிலும், புத்தி சித்தத் திலும் ஒடுங்குமாயினும், சித்தம் முடிவாக நிற்றல் பற்றி, ``மனாதி சித்தாதியில் செல்ல`` என்றார். தத்துவ ஒடுக்கங்களை இங்கு ஒருவாறு சிறிது கூறினாரன்றி, முற்றும் விரித்துக் கூறிற்றிலர், இஃது அதற்கு இடமன்மையில், ``பொருத்த, செல்ல`` என்பனபோல, `போத` எனச் செயதவனைச்சமாக ஓதாது, திரித்து ஓதினார்; முன்னின்ற எச்சங்கள் இரண்டும் எண்ணின் கண் வந்தமை தோன்றுதற்கு, `ஆன்மா, தத்துவங்கள் அனைத்தினும் நீங்கின் சிவமே, அதற்குச் சார்பாய் விடுமாதலின், மனத்தை அவ்வகையிற் பயிற்றும் யோகம், அந்த ஞானத்தை நிலை பெறுவிக்கும்` என்பதாம்.
இதனால், ஞான தாரணையின் இயல்பும், பயனும் கூறப்பட்டன.