ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பதிகங்கள்

Photo

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 

English Meaning:
She is the Damsel of the Vedas;
She belongs to the astral land of Cranium;
He is the bridal lord;
He sleeps in the land of Muladhara;
Gently rouse Him,
And make Him meet Her,
You shall then be forever young
Upon lordly Nandi I avow,
This truth forever and ever.
Tamil Meaning:
கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.
Special Remark:
மேலை நிலம், ஆஞ்ஞை. வேதகம் - இரசவாதம்; இங்கு, பாசஞான பசுஞானங்களைப் பதி ஞானமாக மாற்றுதல். பெண் பிள்ளை, திரோதான சத்தி. இவளது செயல் உயிரின் உணர்வைப் பக்குவப்படுத்துதலின், ``வேதகப் பெண்பிள்ளை`` என்றார். எழுகின்ற - எழுப்பினால் எழத்தக்க; இஃது எதிர் காலத்தில் நிகழ் காலம். `துயில்கின்ற` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும். மூர்த்தி, உறங்கிக் கிடக்கின்ற குண்டலியோடு சேர்ந்து அதுவேயாய், அறியாமையாயுள்ள உயிரின் உணர்வு. இஃது எழுந்து மேலுள்ள ஆதாரங்களையும் கடந்து ஆஞ்ஞையை அடைந்து, அங்குநின்று அறிவைப் பயக்கின்ற திரோதான சத்தியை உணருமாயின், அவ் வுணர்வு `யான், எனது` என்னும் பற்றுக்களினின்றும் நீங்கித் தூய்மை பெறுவதாகும். அதனையே ``பாலன்`` என்றார். ``பாலனும்`` என்ற சிறப்பும்மையால், `அப் பாலன், இம்மை மறுமை நலங்களுடன், வீட்டையுந் தரத்தக்கவன்` என உரைக்க. இனி ``மூர்த்தி`` என்பதற்கு, `விநாயகர்` என்றாயினும், `பிரமன்` என்றாயினும் பொருள் கொள்ளின், ``பெண்பிள்ளை`` என்றவளை வல்லபை, வாணி` என ஏற்ற பெற்றியான் உரைத்துக்கொள்க. இவ்விருவர்க்கும் பிள்ளை இல்லையாயினும் `பிறப்பான்` என்பதனை உம்மையால் உரைத்துக் கொள்க. இவ்வாறு பொருள் உரைப்பினும், கருத்து மேற்கூறியதே யாம். `ஆதல்` - உண்டாதல்.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையது சிறப்புக் கூறப்பட்டது.