ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பதிகங்கள்

Photo

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

English Meaning:
From the peaks of Cranium ranges
The heavenly waterfall
Unceasing cascades
Coursing prana through the spinal channel;
There on the stony arena (of Mount Meru within)
The Lord performs His timeless dance;
That unending Bliss Light,
I witnessed.
Tamil Meaning:
மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.
Special Remark:
நீங்களும் இவற்றைக் காண முயலுதலேநன்று என்பது குறிப்பெச்சம். `மலை` என்பதனை உயர்வு பற்றி, ``மலையார்`` என உயர்திணையாககிக் கூறினார். `மலை` என்பது` தலைமை பற்றி மேருவைக் குறித்தது. முதுகெலும்பை `வீணைத் தண்டு` என்பது போல, `சந்திரசூரியர்` எனப்படுகின்ற இடைநாடி பிங்கலை நாடிகளால் சூழப்பட்டுள்ளமைபற்றி, `மேருமலை` எனக் கூறலும் யோகநூல் வழக்கு. `அதன் தலை` என்பது, `புருவநடு. தலை` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் குறிக்கும். இங்கு அது புருவநடுவைக் குறித்தது. `வானீர்` என்பது சிலேடையாய் `ஆகாய கங்கை` (வான் நீர்) என்றும், `விந்து` எனப்படும் வெண்பால் - சுக்கிலம்` (வால் நீர்) என்றும் இரு பொருள் குறித்து, உருவக நயத்திற்கு இயைந்து நின்றது.
`கருவிற்கு வித்தாகிய வெண்பால், நெற்றியில் தோன்றிப் புருவநடுவில் உருப்பட்டு நிற்கின்றது` என்பதும், `அஃது இயற்கை யாக இடைநாடி பிங்கலைநாடிகள் வழியாகக் கீழ் இறங்கிச் சுவாதிட் டானத்தை அடைவதனாற்றான் பால் உணர்ச்சியாகிய இழி நிலை உண்டாகின்றது` என்பதும், `அவ் இழிநிலை எவ்வாற்றானும் உடற்குக் கேடுபயப்பதே` என்பதும், அதனை அவ்வாறு அவ் இரு நாடிகள் வழியாக இறங்காது, யோகசாதனையால் நடுநாடியாகி சுழு முனை வழியாக இறங்கச்செய்தால், `அஃது உடலுக்கு வலுவூட்டி, நரை திரை மூப்புப் பிணிகள் வாராமற் காக்கும் அமுதமாய்ச் சிறந்து நிற்கும்` என்பதும் யோகநூற் கொள்கைகள். அதுபற்றியே அவை இவ் வெண்பாலை, `அமுதம்` என்றே குறிப்பிடுதலுடன், அவற்றை நடுநாடிவழியாக ஏற்பதை, `பருகுதல்` என்றேயும் கூறுகின்றன.
சிறப்புமுதலாய காரணங்கள் பற்றி இவற்றையெல்லாம் ஆடவரை நோக்கியே அவை கூறுகின்றனவாயினும், பெண்டிர்க்கும் இவை ஒத்தன என்பதே கருத்து. எவ்வாறெனில், யாதொரு சாதனையும் பெண்டிரை விலக்கி, ஆடவர்க்கு மட்டுமேயாகக் கூறுதல் வேதமதங்களின் கருத்தன்று ஆதலின். சாதனங்களை மேற்கொள்ளும் முறைகளில் சிறிது மாறுபடுதல் கூடும்; அவ்வளவே வேற்றுமை. அதனால், `புருவநடு விந்துத்தானம்` என்பது பெண்டிர்க்கும் பொதுப்படக் கூறுவதேயாம். ஆயினும், அவர்கட்குப் பால் உணர்ச்சிக் காரணமாய நீர் மணிபூரகத்தை அடையும்பொழுதே கருப்பையிற் கலந்து செம்பாலாக (சோணிதமாக) மாறிப் பின் சுவாதிட்டானத்தை அடைவதாகும்.
``பாயும், நாடும்`` என்பன முற்றுக்கள். ``நெடுநாடி ஊடு போய்`` என்பதனை, ``கண்டேன்`` என்பதற்கு முன்வைத்து உரைக்க. புருவ நடு பிறைவடிவிற்று ஆதலாலும், அங்கு இறைவனது நடனம் உளதாதலாலும் அதனை ``சிலைஆர் பொது`` என்றார். இஃது உயிர்கட்கு அறிவைப் பயக்கும் பர நடனம் - அதிசூக்கும நடனம் ` என்பதை ஞான நூல்களை நோக்கி அறிக. இருதயத்தில் செய்யும் நடனம் சூக்கும நடனமேயாம். இருதயம் அருள்வெளி - சிற்றம்பலம். புருவ நடு ஆனந்த வெளி - பேரம் பலம். `சோதி திருநடம் ஆடும்` என மேலே கூட்டி, ``ஆடும்`` என்பதன்பின், இவற்றை` என்னும் சொல்லெச்சம் வருவித்துக் கொள்க.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையின் இயல்பு கூறப்பட்டது.