ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

பதிகங்கள்

Photo

வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

English Meaning:
If breath that is forked in and out,
Is on mind directed and centred,
Well may you sleep
In the spacious bed chamber,
Of the Body Cave
That has doors two and windows seven
And long, long may you live there too

Tamil Meaning:
சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.
Special Remark:
முதலடியை இறுதியில் வைத்துரைக்க. இங்கு, ``பாய்ச்சுதல்`` என்பது ``புறப்படாப் பாய்ச்சுதல்`` என விளக்கிக் கூறப்பட்டமை காண்க. ஏழு சாலேகம், கண், காது, மூக்கு இவற்றின் ஆறு துளைகளுடன், சிறுநீர் வழித்துளை, தலைவாயில், வாய் கடை வாயில், எரு வாய். பாழி - பாழை உடையது. இத் துணை அமைப்புக்கள் இருந்தும் ஆன்மா அதனைத் தூய்மைசெய்து, விளக் கேற்றி வைத்து இன்பமாக வாழாமல் வாளா இருத்தலால், உடம்பை, ``பாழ் வீடு`` என்றார். ``இயமம், நியமம், பிராணாயாமம் என்ப வற்றால் அவ்வீடு தூய்மையும், விளக்கமும் செய்யப்பட்டால், தாரணையில் பல காலம் நலம் பெற்று வாழலாம்`` என்பார் ``பெரிய தோர் பள்ளியறை; ``வாழலுமாம்பலகாலம் என்றார். பிற வற்றை உரு வகம் செய்து, ஆதாரங்களை வாளா கூறினமையால், இது வியநிலை யுருவகம். ``இரண்டுவாசல் - ஏலுடைத்தா அமைத்தங் கேழு சாலேகம் பண்ணி`` (தி.4 ப.33 பா.4) ``பாழறை உனக்குப் பள்ளி யறையாக`` (தி.11 கழுமல) என்னுந் திருமொழிகளை இங்கு நினைவு கூர்க.
யோக நெறியில் நிற்பவர் உடம்பு ஓங்கி நிற்பதொரு கோபுரம் போல்வதும், ஆதாரங்கள் அக்கோபுரங்களில் உள்ள நிலைகள் போல்வனவும், மனம் அக்கோபுரத்தினைப்பற்றி ஏறுதற்குரிய கை கால் முதலிய உறுப்புப் போல்வனவும், பிராண வாயு அவ்வுறுப்புக் களுக்குப் பற்றுக் கோடாய் உதவும் நூலேணி போல்வதும் ஆகும். ஆகவே, கோபுரத்தின்மேல் ஏறிச் செல்பவர்க்கு நூலேணி இன்றியமை யாததுபோல, யோகிகட்குப் பிராணாயாமம் இன்றியமையாததாம், அதனால், ``யோகம்`` என்றாலே, பிறவற்றை எல்லாம் விடுத்து, ``மூச்சை அடக்குதல்`` என்றே பொதுவாகக் கொள்கின்றனர். நாயனார் ``போழ்கின்ற வாயுப் புறப்படாப் பாய்ச்சுறில்`` என இங்கும், இவ்வாறே பல விடத்தும் பிராணயாமத்தை எடுத்தோதிப் போதல், அதன் இன்றியமையாமை பற்றியேயாம் என்க.
இதனால், ``பிரணாயாம பிரத்தியாகாரங்களைப் பயின்ற வர்க்குத் தாரணைக்கண் சலியாது நிற்றல் அரிதன்று`` என்பது கூறப்பட்டது.