ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்

பதிகங்கள்

Photo

உகந்துநின் றேபடைத் தான்உல கேழும்
உகந்துநின் றேபடைத் தான்பல ஊழி
உகந்துநின் றேபடைத் தான்ஐந்து பூதம்
உகந்துநின் றேஉயிர் ஊன்படைத் தானே. 

English Meaning:
In fondness for us He created the seven worlds,
In fondness for us He created the several aeons
In fondness for us He created the five elements;
In fondness for us He created this body breath.
Tamil Meaning:
சிவபெருமான் `சுத்தம், மிச்சிரம், அசுத்தம்` என்பனவாக உலகங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நல்லூழி, தீயூழி, பொதுவூழி` என்பனவாகக் காலங்களை முத்திறத்துப் பல்வேறு வகைப்படப் படைத்ததும், `நிலம், நீர், தீ, வளி, வான்` எனப் பூதங்களை ஐந்தாகப் படைத்ததும், உடம்பு களை, தேவஉடம்பு, மக்கள்உடம்பு முதலாக ஏழு வகையாகப் பலவேறு வகைப்படப் படைத்ததும் எல்லாம் உயிர்கள் உய்ய வேண்டும் என்று விரும்பியேதான்.
Special Remark:
எனவே, சிவன் குயவன் போலத் தன் நலம் கருதிப் பல படப் படையாது, உயிர்களின் நலம் கருதியே அவ்வாறு படைக் கின்றான் என்றதாம்.
இதனால், படைப்பினை இறைவன் பலபடப் படைத்தற்கண் நிகழ்வதோர் ஐயம் அறுக்கப்பட்டது.