ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 13. அநுக்கிரகம்

பதிகங்கள்

Photo

விடையுடை யான்விகிர் தன்மிகு பூதப்
படையுடை யான்பரி சேஉல காக்கும்
கொடையுடை யான்குணம் எண்குண மாகும்
சடையுடை யான்சிந்தை சார்ந்துநின் றானே.

English Meaning:
He is Lord Supreme;
He has bull for His mount;
Mighty demons for army;
Boundless is His munificence
He gifts the world for us;
His goodness alone is goodness;
He is of matted locks;
He dwells in the thoughts of all.
Tamil Meaning:
நன்மையே (மங்கலமே) வடிவாய் உள்ள சிவ பெருமான் உலகியிலின் வேறுபட்டவன்; அஃது அவன் இடபத்தையே ஊர்தியாகவும், பூதங்களையே உறுதிச் சுற்றமாகவும் கொண்டிருத்த லால் விளங்கும். அதனால், உயிர்களின் வினைகட்குத் தக்க பரிசாக உலகத்தைப் படைத்துக் கொடுக்கும் கொடையாளனும், கொடுத்து அவ்வுயிர்களின் அறிவிற்கறிவாய் நின்று வினைப் பயனைத் துய்ப்பித்து அவை செவ்வி முதிர்ந்த காலத்தில் வீடுபெறச் செய்கின்றவனும் அவனே.
Special Remark:
``குணமே குணமாகும் சடையுடையான்`` என்பதனை முதற்கண் வைத்து, `விகிர்தன்` என்றதனை அதன் பின்னர்க்கூட்டி, அதன்பின்னும், `படையுடையான்` என்பதன் பின்னும் ``ஆதலின்`` என்னும் சொல்லெச்சங்கள் வருவிக்க. ``குணம்`` இரண்டனுள் முன்னது `நன்மை` என்னும் பொருட்டு. ``குணம் நாடிக் குற்றமும் நாடி`` (குறள், 504) ``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` (தி.8 திருவம்மானை, 20) ``குன்றே யனைய குற்றங்கள் குணமாம் என்றே நீகொண்டால் - என்றான் கெட்டது`` (தி.8 குழைத்த பத்து, 3) ``குற்றம் செய்யினும் குணம்எனக் கருதும் கொள்கை கண்டு`` (தி.7 ப.55 பா.4) என்பவற்றிற் போல. `குணம் எண்குணமாம்` எனவும் பாடம் ஓதுப.
இதனால், சிவபெருமானே கட்டவும், அவிழ்க்கவும் வல்லனாதல் தெளிவிக்கப்பட்டது.
``கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடீ``
-தி.8 திருச்சாழல், 15
என்றருளியவாற்றால், இடப ஊர்தி உலகியலுக்கு ஒவ்வாமை பெறப் படும்.