ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பதிகங்கள்

Photo

இருந்த மனத்தை இசைய இருத்திப்
பொருந்திய லிங்க வழியது போக்கித்
திருந்திய காமன் செயலழித் தங்கண்
அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே. 

English Meaning:
The Lord was seated in Yoga
His thoughts stilled in meditation deep;
Lo! there came Kama
To tempt the Lord with shafts of love.
But the Love-god`s wiles, the Lord foiled in Yoga Way;
This He did at Korukkai, the shrine divine.
Tamil Meaning:
சிவபெருமான் திருக்குறுக்கை வீரட்டத்தில் எழுந் தருளியுள்ள நிலை, தன்வழி நின்ற மனத்தை நம் வழிப் பொருந்துமாறு நிறுத்திப்பின் மகளிரோடு மெய்யுறுதலை அறவே விடுத்து, எத்தகை யோர்க்கும் காமத்தை விளைத்தலில் வல்ல காமவேளது குறும்பை அழித்து, அந்நிலைக்கண் நாம் அசையா திருக்கத்தக்க அரிய தவயோக நிலையேயாம்.
Special Remark:
`இந்நிலை பல சமயத்தார்க்கும் பொது` என்பது பற்றி, `அருந்தவ யோகம்` எனப் பொதுப்படக் கூறிப் போந்தார். லிங்கம் - குறி. வழி - ஒழுக்கம். சிவபெருமான் காமனை எரித்த வரலாற்றால் அறியக் கிடக்கும் உண்மை வெளிப்படை என்பது பற்றி, இவ்வாறு இனிது விளங்க ஓதியொழிந்தார். ``அங்கண்`` என்றதன்பின் `நிற்கும்` என ஒருசொல் வருவிக்க. `குறுக்கை` என்பது, `கொறுக்கை` என மருவிற்று. `குறுக்கை என்பதே பாடம்` எனலுமாம். `சிவபெருமான் கொறுக்கை அமர்ந்தது, இருத்தி, போக்கி, அழித்து நிற்கும் யோகமே` என வினை முடிவு செய்க.
உமாதேவி, `தக்கன் மகள்` என்னும் நிலையை மாற்றிக் கொள்ள விரும்பிச் சிவபெருமானது அருளிப்பாட்டின்படி மலை யரையனுக்கு மகளாய்த் தோன்றி வளர்ந்து இமயமலையில் தவம் செய்துகொண்டிருக்க, சிவபெருமான் சனகாதி நால்வர் முனிவர்கட்கு உண்மை ஞானம் உணர்த்த வேண்டித் திருக்கயிலையில் தென்முகக் கடவுளாய் யோக நிலையில் இருந்த பொழுது, திருமாலின் சொற்படி, பிரமன் முதலிய தேவர்கள் தமக்குத் துயர் விளைத்த சூரபதுமனாதி அசுரரை அழித்தற்குச் சிவபெருமான் உமாதேவியாரைக் கூடி முருகப் பெருமானைத் தருதற் பொருட்டு அவருக்குக் காமத்தை விளைக் குமாறு காமவேளை ஏவினர். அவன் சென்று சிவபெருமான்மீது தனது மலர் அம்புகளை விடுத்தபொழுது, சிவபெருமான் தமது நெற்றிக் கண்ணைச் சிறிதே திறக்க, அதினின்றும் புறப்பட்டுப் படர்ந்த தீயால் காமவேள் சாம்பராயினன். இவ்வரலாற்றைக் கந்த புராணம் விரித்துக் கூறும். இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்குறுக்கை வீரட்டம் என்பதையும் நாயனார் தாமே எடுத்தோதினார். இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால், சிவபெருமான் காமனை எரித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
சிவபெருமானது அட்ட வீரட்டங்களையும் அவை குறிக்கும் வீரச் செயல்களோடு கூறும் பழைய தனிப்பாட்டு ஒன்று வருமாறு:
பூமன் சிரம்கண்டி, அந்தகன் கோவல், புரம் அதிகை,
மாமன் பறியல், சலந்தரன் விற்குடி, மாவழுவூர்,
காமன் கொறுக்கை, யமன்கட வூர்இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடிதன் சேவகமே.
-தனிப்பாட்டு
(பூமன் - பிரமன். மாமன் - தக்கன். தேம் மன்னு - தேன் மிகுந்த. சேவகம் - வீரம்)
இவற்றுள் வழுவூர் ஒன்றும் வைப்புத்தலம்; ஏனைய தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
இவ்வாறு நாயனார் ``வீரட்டம்`` எனச் சிறப்புப் பெற்றத் தலங்களைக் குறித்தருளினமையால், பிறவகையில் சிவபெருமானது அறக்கருணைச் செயல் மறக்கருணைச் செயல்களைக் குறிக்கும் தலங்களும், அவை பற்றிய வரலாறுகளும் சிவநெறி நிற்பார்க்கு இன்றியமை யாதனவாதல் அறியப்படும். இவ்வாற்றானே சமய குரவர் நால்வரும் தமது திருப்பாடல்களாலும், சென்று வணங்கிய திருநெறி ஒழுக்கத்தாலும், அதியற்புத விளைவுகளாலும் திருக்கோயில்களின் இன்றியமையாமையை இனிது விளக்கினமை கருத்திற் கொள்ளற் பாலது.