
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு
பதிகங்கள்

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங் கியோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே.
English Meaning:
The Kundalini Fire coiled in MuladharaUpward He coursed it to Hollow on top;
That Fiery Yoga Way He scorched the God of Death
That was at Kadavoor, the holy shrine here below.
Tamil Meaning:
சிவபெருமான் நிலவுலகில் உள்ள திருக்கடவூரில் காலால் காலனை உதைத்துத் தள்ளி, ஒர் யோகி போல் இருத்தல் வியப்பைத் தருவது.Special Remark:
இது காலசங்கார மூர்த்தியைத் திருக்கடவூரில் உள்ள ஓர் யோகிபோல வைத்துச் சிலேடையால் உவமித்தது. இதனை,யோகிக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`மூலாதாரமாகிய இடத்தில் வைத்துக் கீழ்நோக்கித் துயில் கின்ற நாகராசனை அதன்மேல் உள்ள சுழுமுனைக்கு மேலதாகிய புருவ நடுவாகிய இலாடத் தானத்தை நோக்கி நிற்குமாறு எழுப்பி, அதன்பொருட்டு வாயுக்களுள் முதலாவதாகிய பிராண வாயுவைச் சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்தி, அத்தகைய வாயுப் பயிற்சியாலே, தனக்கு அளந்த வாழ்நாள் எல்லைக்கண் கூற்றுவன் வந்து தன்னை அணுகாதவாறு தடுத்துத் திருக்கடவூரில் நலத்துடன் நீடு வாழ்கின்றமை `வியப்பு` எனவும்,
காலசங்கார மூர்த்திக்கு ஏற்ப உரைக்குங்கால்,
`முப்பத்தாறு தத்தவங்களுள் கீழ் நிற்பதாகிய நிலத்தின்கண் அமைந்த கோயிலிலே வழிபாட்டில் முனைந்து நின்ற மார்க்கண்டேய முனிவரை நாதமாகிய மேல்தத்துவ புவனத்தில் மேலான அபர முத்தராய்ச் சென்று வாழுமாறு கடைக்கணித்து, அவர் வழிபட்ட இலிங்கத் திருமேனியில் வெளிப்பட்டு அவர்மேல் வந்த காலனைக் காலால் உதைத்துத் தள்ளி, அருளோடு நீடு நிற்றல் வியப்பு` எனவும் உரைத்துக் கொள்க.
நாகராசன், குண்டலினி. இதனைப் பெண்பாலாகக் கூறுதல் மரபாயினும், `நாகராசன்` என்னும் வழக்குண்மை பற்றி ஆண்பாலாக ஓதினார். இரண்டாவது பொருட்கு, துவாரம் - வாயில்; கருவி. முதல் உரையுள் ``நோக்கி`` என்பது, அதன் காரியம் தோன்ற நிற்கும். `சிவபெருமான்` என்னும் எழுவாய் அதிகாரத்தால் வந்தியைந்தது. `அங் கியோகமாய்` என்பதில், யகரம் வருவழி இகரங் குறுகிற்று(தொல். எழுத்து, 411) `யோகியாய்` எனற்பாலதனை, ``யோகமாய்`` என்றார். ஆக்கம் உவமை குறித்து நின்றது. இறுதியில் `வியப்பு` என்பது சொல்லெச்சம். இங்ஙனம் சிலேடித்ததனானே, அட யோகம் செய்வார், வாழ்நாள் சிறிது நீட்டிக்கப் பெறுதலையும், சிவயோகம் செய்வார், ஞானம் பெற்று வீடு அடைதலையும் குறிப்பால் உணர்த்திச் சிவனது திருவருட் பெருமையை விளக்கினார் என்க. எனவே, சிவபெருமான் காலனைக் காலால் உதைத்த வரலாறு ` யோக மதத்தவர், சிவநெறியாளர்` என்னும் இருதிறத்தார்க்கும் ஏற்ற பெற்றியால் மேற்குறித்த இரண்டு உண்மை களையும் விளக்கி நிற்றல் பெறப்பட்டது.
மிருகண்டு முனிவர் புத்திரப்பேறு இன்மையால் தம் இல்லா ளோடும் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யச் சிவபெருமான் வெளிப்பட்டு `உங்கட்கு அறிவிலியாய் நூறாண்டு வாழும் மகன் வேண்டுமோ, அறிவுடையவனாய்ப் பதினாறாண்டு வாழும் மகன் வேண்டுமோ` என வினாவ, தவம் புரிந்த இருவரும், `அறிவுடைய மகனே வேண்டும்` என்றனர். அதன்படி கொடுத்து மறைந்த சிவபெரு மானது வரத்தின்படி அவர்கட்கு மார்க்கண்டேய முனிவர் பிறந்து, கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்து விளங்கும் பொழுது பதினாறா வது ஆண்டு வந்து அடைய, பெற்றோர் இருவரும் மகனைக் காணுந் தோறும் வருந்திக் கண்ணீர் விடுத்தனர். மார்க்கண்டேயர் அவர்களது வருத்தத்திற்குக் காரணத்தை அவர்பால் கேட்டறிந்து அவர்களிடம் விடைபெற்றுச் சென்று சிவபெருமானை இலிங்க வடிவில் பூசை செய் திருந்தார். அவருக்கு அளந்த நாள் முடிவில் கூற்றுவன் வந்து அவரை அழைக்க, அவர் சிவபெருமானையே தஞ்சமாக அடைந்து நின்றார். கூற்றுவன் அம்முனிவர் பற்றி யிருந்த இலிங்கத்தோடு அவரைப் பாசத் தாற் பிணித்து இழுத்தபொழுது, சிவபெருமான் அவ் இலிங்கத்தி னின்றும் வெளிப்பட்டுத் தமது இடக் காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளி, மார்க்கண்டேயரை என்றும் பதினாறாண்டாக இருக்க அருள் புரிந்து மறைந்தார். இவ்வாறு இவ் வரலாறு கந்த புராணத்துள் விரித்துக் கூறப்பட்டது. இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருக்கடவூர் வீரட்டம் என்பதை நாயனாரே அருளிச் செய்துள்ளார். இது காசியில் கங்கா நதியின் மணி கண்ணிகைத் துறையில் நிகழ்ந்ததாகவே கந்த புராணத்தில் சொல்லப் பட்டது. இதுவும் சிவபெருமான் நேரே செய்த வீரச்செயல்.
இதனால் சிவபெருமான் காலனை உதைத்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage