ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பதிகங்கள்

Photo

எங்கும் கலந்தும்என் உள்ளத் தெழுகின்ற
அங்க முதல்வன் அருமறை யோதிபாற்
பொங்குஞ் சலந்தரன் போர்செய்ய நீர்மையின்
அங்கு விரற்குறித் தாழிசெய் தானே.

English Meaning:
The Lord pervades all,
My heart too He fills with joy;
He spoke the Vedas and scriptures all;
Him—the haughty Jalandhara challenged in duel
And the Lord with his toe marked a circle
And into it He saw the monster`s final end.
Tamil Meaning:
எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்பினும், என் உள்ளத்தில் விளங்கி நிற்கின்றவனும், ஆறங்கம் அருமறைகளை அருளிச்செய்த முதல்வனும் ஆகிய சிவபெருமானிடம், மிக்க சினத்தை உடைய `சலந்தரன்` என்னும் அசுரன் போர் செய்யச் சென்றபொழுது, அப்பெருமான் அவனது வரத்தின் தன்மையை அறிந்து அதற்கு ஏற்பத் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறி அதனை அவனாலே எடுப்பித்து அதன்வழி அவன் தன்னாலே தான் அழியச் செய்தான்.
Special Remark:
இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவிற்குடி வீரட்டம்.
ஒருமுறை சிவபெருமான், தமது கயிலைக்கு வந்த இந்திரன் முன், ஒரு திருவிளையாடலால் வேற்றுருக் கொண்டபொழுது, உண்மையறியாத இந்திரன், அப்பெருமானை இகழ்ந்து நோக்க, அதனால் அவர் உருத்திர வடிவுடன் நின்று கொண்ட சினத்தைக் கண்டு இந்திரன் அஞ்சி வணங்கினான். அதனால், சிவபெருமான் தாம் கொண்ட சினத் தீயை மேற்றிசைக் கடலில் எறிய, அஃது ஓர் அசுரக் குழந்தையாயிற்று. அதனைக் கடல் அரசனாகிய `வருணன்` வளர்த்தான். சலத்தால் (நீரால்) தாங்கப்பெற்ற காரணத்தால் `சலந்தரன்` எனப் பெயர் பெற்ற அவ்வசுரன் மிக்க வன்மை உடைய வனாய்த் தேவரைத் துன்புறுத்தத் திருமால் முதலிய தேவர் பலரும் அவனுக்கு அஞ்சி ஓடிக் கயிலையில் வசித்தனர். அதனை அறிந்த சலந்தராசுரன் சிவபெருமானோடு போர் செய்யக் கருதிக் கயிலை நோக்கிச் சென்றான். இதனை அறிந்த தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அப்பெருமான், அவன் தன்னாலே தான் அழிய வேண்டியவனாதலை உணர்ந்து, ஓர் அந்தண வடிவில் அவன்முன் சென்று, `சலந்தரனே, உனது ஆற்றலை அளந்து காணவே யாம் வந்தோம்; உன்னால் இயலுமாயின், இச்சக்கரத்தை எடுத்துச் சுமக்க` என்று சொல்லித் தமது காற்பெருவிரலால் நிலத்தில் ஒரு சக்கரத்தைக் கீறினார். சலந்தரன் செருக்குக் கொண்டு அதனை அரிதில் பெயர்த்து மிக முயன்று உயர எடுத்துத் தன் தலைமேல் வைத்துக்கொள்ள, அச்சக்கரம் சிறந்த படைக்கலமாய் அவன் உடலை இருகூறு செய்து, சிவபெருமானிடம் மீண்டது; தேவர் துன்பம் நீங்கி இன்புற்றனர். இவ்வாறு இவ்வரலாறு கந்தபுராணத்துட் கூறப்பட்டது. இது சிவபெருமான், தான் நேரே செய்த வீரச்செயலாதல் அறிக.
`அறம், மறம் அனைத்திற்கும் நிலைக்களமாய் உள்ளவன் இறைவன். அவன் உரிய காலத்தில் மறத்தினை வெளிப்படுத்தி, ஏற்கும் முறையால் அதனை அழித்து அறத்தினை வளர்த்தருளுவான் என்பது இதனால் அறியத் தக்க உண்மை` என்பது நாயனார் திருவுள்ளமாதல், ``எங்கும் கலந்தும் என் உள்ளத்தெழுகின்ற அங்க முதல்வன் அருமறை ஓதி`` என்ற குறிப்பால் அறியப்படும்.
இதனால், `சலந்தரன்` என்னும் அசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.