ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பதிகங்கள்

Photo

கருத்துறை அந்தகன் றன்போல் அசுரன்
வரத்தின் உலகத் துயிர்களை எல்லாம்
வருத்தஞ்செய் தானென்று வானவர் வேண்டக்
குருத்துயர் சூலங்கைக் கொண்டுகொன் றானே. 

English Meaning:
``Antaka, the Asura
Frightening unto God of Death
Whose name he bore
Armed with boons divine
Harassed worlds all``
—Thus the Celestial Beings moaned to the Lord;
And the Lord,
Lifting high His trident sharp
Pierced him straight to certain death.
Tamil Meaning:
அக இருளாகிய ஆணவமலத்தை ஒத்து, `அந்தகன்` எனப் பெயர் பெற்ற அசுரன் ஒருவன் தான் பெற்ற வரத்தினால் உலகத்து உயிர்களை எல்லாம் துன்புறுத்த, அது பற்றி வருந்தி முறையிட்ட தேவர்கள் பொருட்டுச் சிவபெருமான் சூலத்தின் நுனியில் அவனை ஏற்றித் துன்புறுத்தி அழித்தார்.
Special Remark:
இவ்வீரச் செயலைக் குறிப்பது `திருக்கோவலூர் வீரட்டம்` என்னும் தலமாம்.
ஆணவமலம் அறிவை அழித்தல் பற்றி அதற்கு, `மிருத்தியு` என்ற ஒரு பெயர் உண்டு. `அந்தகன்` என்பதற்கு `இறுதியைச் செய்பவன்` என்பது பொருள். அதனால் இவ்விரு பெயர்களும் ஒரு பொருளவாதல் பற்றி, ``கருத்துறை அந்தகன்றன்போல் அசுரன்`` என்றார். கூற்றுவனுக்கு `அந்தகன்` என்ற பெயர் கூறப்படுதலும் இப் பொருள் பற்றியேயாம். அதனால், `மிருத்தியுவைக் கடத்தல்` என்பதற்கு, `ஆணவ மலத்தின் நீங்குதல்` என்பதே உண்மைப் பொருள் என்பர். உபநிடதங்கள் `இருளைக் கடந்து மேற் போகின் றான்` என்றலும் ஆணவ மலத்தின் நீங்கி இறைவனை அடை தலையே யாம். எனவே, சிவபெருமான் அந்தகாசுரனை மூவிலை வேலால் அழித்த வரலாறு, `அவன் ஆணவ மலத்தை இச்சா ஞானக் கிரியை வடி வாய்த் தொழிற்படும் தனது சத்தியைக் கொண்டு அழிப்பவனாவன் என்னும் உண்மையை விளக்கும்` என்பதும், `அப்பயன் கருதி அவனை வழிபடுதலே சிறந்தது` என்பதும் நாயனாரது திருவுள்ளக் கிடையாதல் அறிக. குருத்து - நுனி. `குருத்தினால்` என உருபு விரிக்க. `உயர் சூலம் கைக்கொண்டு குருத் தினாற் கொன்றான்` எனக் கூட்டுக. இச் செயல் வைரவக் கடவுளைக் கொண்டு செய்வித்ததேயாயினும், `அரசன் ஆலயம் எடுத்தான்` என்பது போல, ஏவுதற் கருத்தாவாய் நின்று செய்வித்தமை பற்றிச் சிவபெருமான் தானே செய்ததாக வைத்து அருளிச் செய்தார். ``அந்தகனை அயிற் சூலத் தழுத்திக் கொண்டார்`` (தி.6 ப.96 பா.5) என்பது திருநாவுக்கரசர் திருமொழி.
`இரணியன், (இரணிய கசிபு) இரணியாட்சன்` என்னும் இரு வருள் இளையவனாகிய இரணியாட்சன் மகன் அந்தகாசுரன். இவன் சிவபெருமானை வழிபட்டுப் பெற்ற வரத்தினால் வலிமை மிக்க வனாய்த் திருமால் முதலிய தேவரையெல்லாம் துன்புறுத்த, அவர்கள் அவனுக்கு ஆற்றாது மகளிர் உருவங்கொண்டு ஓடிக் கயிலையில் அம்பிகையின் தோழியர் கூட்டத்துள் மறைந்திருந்தனர். அதை அறிந்த அந்தகாசுரன் அங்கும் சென்று போர் செய்ய நினைத்த பொழுது, தேவர்கள் முறையீட்டிற்கு இரங்கிச் சிவபெருமான் வைரவக் கடவுளை ஏவ, அவர் தமது சூலத்தலையில் அவனை ஏற்றிப் பலநாள் துன்புறச் செய்து பின் முத்தி பெற அருளிய வரலாற்றின் விரிவைக் காஞ்சிப் புராணம் அந்தகேசுரப் படலத்தில் காண்க. `சிவதீக்கை பெற்றோர் குற்றம் செய்யின், அவர் கூற்றுவனால் தண்டிக்கப்படார்; இவ்வாறு வைரவக் கடவுள் சூலத்தில் ஏற்றித் தண்டிக்கப்படுவர்` என்பது சிவாகம நூற் கருத்து என்பது இங்கு உணர்ந்து கொள்க.
இதனால், சிவபெருமான் அந்தகாசுரனை அழித்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.