ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 2. பதிவலியில் வீரட்டம் எட்டு

பதிகங்கள்

Photo

அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறி வாரே. 

English Meaning:
The Primal Lord,
Who on His matted crimson locks
Wears Ganga`s water sacred,
He destroyed the Cities Three
—Thus say the ignorant;
The Three Cities are the Triple Impurities
It is them He burnt
Who Knows this truth thereof?

Tamil Meaning:
சிவபெருமான் திரிபுரம் எரித்த வரலாற்றைப் புராணங்கள் கூறக் கேட்கின்றுழி, அறிவிலாதார் அவ் வரலாற்றை மட்டுமே கேட்டு, அவ்வளவில் சிவபெருமானைப் புகழ்ந்தொழி கின்றனர். ஆயினும், அவ்வரலாற்றால் அறியத் தக்க உண்மையை அறிகின்றவர் எத்துணையர்! மிகச் சிலரே. அதனால், `இரும்பு, வெள்ளி, பொன்` என்பவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் முறையே `ஆணவம், மாயை, கன்மம்` என்னும் மும்மலக் கட்டினைக் குறிப்பனவாக, `சிவபெருமான் அக்கோட்டைகளை எரித்துச் சாம்பலாக் கினான்` என்பது, `அம்மும்மலங்களின் வலியை அழித்துக் கட்டறுத் தருளுவன்` என்னும் உண்மையையே சிறப்பாக உணர்த்தி நிற்கும்.
Special Remark:
இவ்வீரச் செயலைக் குறிக்கும் தலம் திருவதிகை வீரட்டம். ஏனைய பலவற்றினும் இது சிறப்புடையதாய்ப் பண்டைத் தமிழ் நூல்களிலும் பயின்று வருவதாகலின், இதன் உண்மையை நாயனார் கிளந்தோதினார் என்க.
``தாரகாக்கன், கமலாக்கன், வித்தியுன்மாலி` என்னும் மூவர் அசுரர் சிவபத்தியிற் சிறந்தவராய் மயன் வகுத்த `பொன், வெள்ளி, இரும்பு` இவற்றால் ஆகிய மூன்று கோட்டைகளும் நினைத்த இடத்தில் பறந்து சென்று இறங்கும் சித்தியை அடைந்து, அதனால் உலகிற்கு இடர் விளைத்தனர். அதனைத் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று வணங்கி விண்ணப்பித்து, அவ்வசுரர்களை அழித்தருளுமாறு வேண்டினர். சிவபெருமான் `நம்பால் பத்தி பண்ணுவோரை அழித்தல் ஆகாது` என்று அருளிச் செய்யத் திருமால் புத்தனாக உருக்கொண்டு பிடக நூலைச் செய்து, நாரத முனிவரைத் துணைக்கொண்டு முப்புரத் தவர்பால் சென்று சிவநெறியை இகழ்ந்து, புத்த மதத்தையே சிறந்ததாகக் காட்டி மருட்டினார். அதனால் அம்மாயோன் மயக்கில் அகப்பட்ட முப்புரத் தசுரர் சிவநெறியைக் கைவிட்டுச் சிவனை இகழ்ந்து புத்தராயினர். அதன்பின் திருமால் முதலியோர் சிவபிரானிடம் சென்று வணங்கி, முப்புரத்தவர் சிவநிந்தகராயினமையை விண்ணப்பித்து, அவர்களை அழித்தருள வேண்டினர். சிவபெருமான் அதற்கு இசைவுதரப் பூமியைத் தேர்த்தட்டாக அமைத்துத் தேவர் பலரும் தேரின் பல உறுப்புக்களாயினர். வேதங்கள் நான்கும் குதிரைகளாக, அவற்றை ஓதும் பிரமன் தேரை ஓட்டும் சாரதியாயினன். திருமால் அம்பாக, வாயுதேவன் அம்பின் சிறகுகளும், அக்கினி தேவன் அம்பின் அலகும் ஆயினர். சிவபெருமான் வாசுகியை நாணாகக் கொண்டு மகாமேரு மலையை வில்லாக வளைத்துத் திருமால் முதலியோரால் அமைந்த அம்பைப் பூட்டித் திரிபுரங்களை நோக்கியபொழுது, அவரிடத்து உண்டாகிய கோபச் சிரிப்பால் முப்புரங்களும் வெந்து நீறாயின. இவ்வாறு திருவிற்கோலப் புராணம், காஞ்சிப் புராணங்களில் இவ் வரலாறு விரித்துக் கூறப்பட்டது.
இதனுள் தேவர் பலரும் சிவபெருமானுக்குக் கருவியா யினமை, `அப்பெருமானே கருத்தா` என்பதை விளக்கும். பூட்டிய அம்பினை எய்யாமலே திரிபுரத்தைச் சிரித்து அழித்தமை, அவன் யாதொரு செயலையும் கருவியாலன்றி நினைவு மாத்திரத்தானே செய்பவனாதலை விளக்கும். மலையை வில்லாக வளைத்தமை அவன் எல்லாம் வல்லனாதலைக் குறிக்கும். இவ்வாறு இத்திரிபுரம் எரித்த வரலாறு பல அரிய உண்மைகளை விளக்குவதாம். அவற்றுள் சிறந்த தொன்றினை எடுத்தோதியதனானே ஏனையவற்றையும் தழுவிக் கொள்ள வைத்தார்.
இதனால், திரிபுரம் எரிந்த வரலாறும், அதன் உண்மையும் கூறப்பட்டன.