ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 3. பிரணவ சமாதி

பதிகங்கள்

Photo

வருக்கம் சுகமாம் பிரமமு மாகும்
அருக்கச் சராசரம் ஆகும் உலகில்
தருக்கிய ஆதார மெல்லாந்தன் மேனி
சுருக்கமில் ஞானம் தொகுத்துணர்ந் தோர்க்கே.

English Meaning:
Aum is Bliss of Brahman, the Universe and the Adharas

That letter-cluster (Aum made up of A, U, and M)
Is the Bliss of Brahman;
The Subtle One
As visible creation vast expands;
The Adharas, all, comprise its Form;
Thus is it Known to Jnanis of knowledge vast.
Tamil Meaning:
`ஓம்` எனச் சமட்டியாகச் சொல்லப்படுவது `பிரணவம்` எனவும் அதனை `அகாரம், உகாரம், மகாரம், விந்து. நாதம் எனப் பெரும்பான்மை ஐந்தாகவும், மற்றும் பலவாகவும் பிரித்து வியட்டியாகச் சொல்லப்படுகின்றவற்றை, `பிரணவத்திற்கு` இனம் எனவும் கூறுவர். அவ் இனங்களை மேல், `கலைநிலை` என்னும் அதிகாரத்தில் காணலாம். * அந்த இனங்கள் ஞான வடிவான பல சத்திகளாகும். சத்திக்கும் சிவத்திற்கும் வேற்றுமையின்மையால் அவைகளை, `ஆனந்த மயமான சிவம்` என்றும் சொல்லலாம். அச்சத்திகள் அண்டத்தில் சரம், அசரம் ஆகிய அனைத்துப் பொருள்களிலும் வியாபித்து நிற்கும். மற்றும் பிண்டமாகிய உடம்பில் ஆறாதாரங்கள் முதலான பல இடங்களிலும் நிற்கும். இத்தன்மைகள் எல்லாவற்றையும் உணர்ந்தவர்கட்கே விரிந்த ஞானம் உளதாகும்.
Special Remark:
இனத்தை, ``வருக்கம்`` என்றார். ``சுகமாம் பிரமம்`` என்பது பெயரெச்சத் தொடர் உம்மை இறந்தது தழுவியதனோடு, சிறப்பு. அதனால் சத்தியாதல் பெறப்பட்டது. ஞாயிற்றைக் குறிக்கும் `அருக்கம்` ஒன்பது `ஒளி` (விளக்கம்) என்னும் பொருட்டாய் நின்றது. மேனி - வடிவம். அது தியான வடிவம். `மேனி உளதாம்` எனவும், `ஞானம் உளதாம்` எனவும் எச்சங்கள் வருவித்து முடிக்க.
இதனால் பிரணவ யோகத்தில் பிரணவ பல கலைகளாய்ப் பிரிந்து நின்று பயன் தருதல் கூறப்பட்டது. அக்கலைகள் சராசரங்கள் அனைத்துமாய் நிற்றலைப் பிராசாத நூல்களில் காண்க.
இனி, இம்மந்திரத்திற்கு வைதிக முறையில் பொருள் கூறுவோர், `வருக்கமாவன` ஐம், க்லீம், ஸௌம், ஹ்ரீம், ச்ரீம்` எனவும், `அவை மூலாதாரம் முதலிய இடங்களில் நிற்கும்` எனவும் கூறுவர். அம்முறை சிறப்புச் சிவயோகமாகிய பிரணவ பிராசாத யோக முறையாகாது, பொதுயோக முறையேயாம். இதனையடுத்து வரும் ``சோடச மார்க்கமும், ஈராறின் அந்தமும்`` என்பவற்றாலும் அறியலாம்.