ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்

பதிகங்கள்

Photo

துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.

English Meaning:
Paraparam is a Wondrous Land

That Space Where Turiyas merge
Defies description
They call it Paramparam;
Thus they say who know not;
As Paramparam they worship it;
Who knows, what wondrous Land it is!

Tamil Meaning:
முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.
Special Remark:
``துரியம்`` என்றது பாழை. அடங்குதல் - கீழ்ப்படுதல்; எனவே சொல்லறும் பாழ் அதீத நிலையாயிற்று. ``அரிய`` என்பன, கிடைக்கப்படாத` என்னும் பொருளன. பரம், பரம் - மேலதற்கும் மேலானது. ``அன்றே`` என்னும் தேற்றேகாரத்தைப் பிரித்து, ``நிலம்`` என்பதனுடன் கூட்டுக. உதித்தல் - எதிர்ப்படுதல். ``அறிவார்`` என்பதில் அறிதல். அதனுடன் காரியமாகிய முயலுதலையும் குறித்தது. `முயலுதல் இல்லையேல், அறிந்ததனால் பயன் என்னை` என்க.
இதனால், `முப்பாழும் கடந்த முதற்பாழ் உயிர்களால் முயன்று அடையற்பாலதோ, அன்றோ` என்னும் ஐயம் அறுக்கப்பட்டது. முன் மந்திரத்திரத்திலும், ``அப்பாழில் ஒடுங்குகின்றேன்`` என அனுபவம் காட்டினார். ``நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்``8 என்பது நாயனாரது திருவுளம் ஆதலின், அதுபற்றி எழும் ஐயத்தை இதனால் அறுத்தருள்வாராயினார்.