ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்

பதிகங்கள்

Photo

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

English Meaning:
Beyond Three Spaces—Maya, Bodha and Upasanta

Experiencing the seven Caused States
The Maya Space is left behind;
Experiencing the seven Causal States
The Bodha Space is left behind;
Experiencing and sundering the Cause-Caused States (above)
The Upasanta Space is left behind;
Then alone is End Finale.
Tamil Meaning:
காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.
Special Remark:
போதப்பாழ், `சீவப்பாழ்` என்றும், உபசாந்தம், வியோமப் பாழ்` என்றும் சொல்லப்படுதலை வருகின்ற மந்திரத்தில் காண்க. ஆன்ம தத்துவம் வித்தியா தத்துவத்தின் காரியம் ஆதல் பற்றி அவற்றைக் ``காரியம் ஏழ்`` எனவும், அவை போல வித்தியா தத்துவம் வேறு தத்துவத்தின் காரியம் ஆகாது ஆன்ம தத்துவத்திற்குக் காரண மாகியே நிற்றல் பற்றி அவற்றை, ``காரணம் ஏழ்`` என்றும், அதற்கு மேல் நீங்க வேண்டுவன இன்மையின் அந்நிலையை, ``உபசாந்தம்`` என்றும் கூறினார். தீர்தற்கு, `பந்தம்` என்னும் எழுவாய் வருவிக்க.
இதனால், `முப்பாழாவன இவை` என்பதும், அவற்றின் இயல்புகளும் கூறப்பட்டன.