ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்

பதிகங்கள்

Photo

எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.

English Meaning:
Lord is in the Space Beyond the Three Spaces

Of Himself, daily,
Nandi that rides the bull
Blesses you,
With impediment none;
And when I reach His Feet,
I cross the Space,
And in that Space
That imagination transcends
I merge.
Tamil Meaning:
`என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.
Special Remark:
இதனால், `பாழ்` என்பது, `மாசாவன அனைத்தும் நீங்கிய தூய்மையே` என்பது விளங்கும். ஆகவே, மாயப் பாழாவது மான்` எனப்படும் பிரகிருதி நீக்கமும், `போதப் பாழ்` என்பது, `மோகினி` எனப்படும் அசுத்த மாயை நீக்கமும், `வியோமப் பாழ்` என்பது, `விந்து` எனப்படும் சுத்தமாயை நீக்கமும் ஆதல் பெறப் பட்டது. முப்பாழ்களுள் ஒன்றிரண்டையே முழுத் தூய்மையாகக் கருதுவார் கருத்துக்கள் திரிபுணர்வேயாதல் பற்றி அவற்றைக் ``கற்பனை`` என்றார். முப்பாழையும் கடந்த அப்பாழே முன் மந்திரத்தில் ``தூய சொரூபம்`` எனப்பட்டது. ``ஏறும் பதியெனும் நந்தி`` என்பதை, `ஏறும் நந்தியெனும் பதி` என மாற்றியுரைக்க. இந்தப் பதியினது பதமது கூட` என்றதனால் `இம் முப்பாழ்த் தரிசனமும், அவற்றது சுத்தியும் சிவபெருமானைப் பொதுநீக்கித் தனக்குவமை யில்லாத தனிப்பெரும் பொருளாக உணரும் உணர்வைப் பெற்றவர் களுக்கே கூடும்` என்றதாயிற்று. ``எதிர் அற`` என்றதும், இதனை வலியுறுத்தற்கேயாம்.
இதனால், `முப்பாழுங் கடந்தவழியே முதற்பாழாகிய சொரூப நிலையை அடைதல் கூடும்` என்பதும், `அது சிவஞானம் வழியாகவே கூடும்` என்பது கூறப்பட்டன.