ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்

பதிகங்கள்

Photo

நனவில் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யம்தற் பதமே.

English Meaning:
From Jiva Turiya to Para Turiya

The Fourth States of Jagrat
Is Turiya (Jiva Turiya);
There Jiva attains Tvam-Pada;
The Karmas end;
Again, commencing from Jiva Turiya
Is the Jagrat State in Para Turiya;
Reach Turiya in Para Turiya State,
There indeed is Tat-Pada State.
Tamil Meaning:
பிராரத்த வினை நீங்காமையால், கருவி கரணங்களோடு கூடிய உடம்பிற்றானே புருவ நடுவின் கண் நிகழும் சுத்த சாக்கிரம் தலிய சிவ ஐந்தவத்தைகளில் நாலாவதாகிய சிவ துரியத்தில் சீவன் ஆன்ம சுத்தியைப் பெற்று `துவம்` பதப் பொருளாய் நிற்றல்போல, பிராரத்தவினை நீங்கினமையால், கருவி கரணங்களைக் கடந்து நிற்கின்ற நிலையில் நிகழும் பர சாக்கிரம், பர சொப்பனம் முதலாக நிகழும் பர அவத்தை ஐந்தில் நாலாவதாகிய பரதுரியத்தில் ஆன்மா, `தத்` பதப் பொருளாய் நிற்கும். அஃதாவது, `சிவமேயாய் நிற்கும்` என்பதாம்.
Special Remark:
`பராவத்தைகளில் சீவன் முத்தி தவிர ஏனைய நான்கும் உண்மையில் உடம்பு நீங்கிய பின்னர் நிகழ்வனவாயினும் சீவன் முத்தி நிலையிலும் அவை பொதுவாக நிகழும்` என்பதும், `இம்மையில் (உடம்பு உள்ளபொழுது) பராவத்தையில் முடிவான அதீத நிலையில் நின்றவர்களே அம்மையில் (உடம்பு நீங்கியபின்) பரமுத்தியை அடைவர்` என்பதும், `ஏனையோர் தாம் தாம் இங்கு நின்ற நிலைக்கு ஏற்ப அங்குள்ள நிலைகளை அடைவர்` என்பதும் இம்மந்திரத்தால் அறிக. கேவலாத்துவிதிகளும் சீவன் முத்தரை, வரிட்டன், வரியான், முதலாக வகைப்படுத்துவர்.
முதலடியின் ஈற்றில் `கண்` உருபு விரிக்க. ``தனதுயிர்`` என்பதில் ஆறன் உருபு, `இராகுவினது தலை` என்பதுபோல `ஒற்றுமைக் கிழமைக்கண்` வந்தது. பின்னர் ``வினை அறு சீவன்`` என்றதனால், முன்னது `வினை உருசீவனது நிலை` என்பது பெறப்பட்டது. வினை, இங்குப் பிராரத்தம். ``ஆமாறுபோல`` என்ற அனுவாதத்தால், ஆமாறும்தானே பெறப்பட்டது. `தன` என்பது இடை ஐகாரச் சாரியை பெற்றது.
இதனால், சீவ துரியத்திற்கு அப்பாற்பட்ட பர துரியத்தின் சிறப்பு அதனது பயன் உணர்த்தும் முகத்தால் உணர்த்தப்பட்டது.