
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்
பதிகங்கள்

தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.
English Meaning:
If You Cannot Reach Turiya Land, Persevere StillReach the Turiya Land, and be there;
If you cannot reach it
Think of Lord in the Way scriptures speak of,
You shall reach the Truth
That is beyond beyond words.
Tamil Meaning:
இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.Special Remark:
`துரியத்திற்குக் கீழ் உள்ள அவத்தைகள் தாம் மெய்ப் பொருளோடு தொடர்பில்லாத நிலை` என்பதும், `பல், நா, உதடுகளின் செயல்கள் துரியத்திற்குக் கீழ் உள்ள நிலைகளில்தான் நிகழும்` என்பதும் கருத்து. இங்குக் கூறிய துரியம் சிவ துரியம், ஏனெனில், சீவதுரியத்தில் மெய்ப்பொருள் தொடர்புறாது நிற்கும் ஆகலானும், பரதுரியத்திற்கு சென்றோர் மீளார் ஆகலானும் என்க. `இறைவனை ... ... ... தத்துவந்தான எட்டாதெனினும்நின் ரெட்டும். (ஆதலால்) துரிய நிலத்தினைத் தொட்டே இருமின்` எனக் கூட்டி முடிக்க.``துரியம் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றதென் றுந்தீபற;
துறந்தார் அவர்களென் றுந்தீபற``*
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியுடும் அன்பர்க் கவன்``*
என்பவற்றிலும், `சிவதுரியத்திற்றான் சிவன் தொடர்புற்று நிற்பான்` எனக் கூறப்பட்டது. துரியத்திலே நிலையாக நின்றால், பிரபஞ்சம் தாக்கா தொழிதலுடன், மேல் அதீதத்திற்குச் செல்லும் ஆற்றலும் உளதாகும் என்க.
இறைவனை அறியுமாற்றால் அறிதலாவது, அவன் அருளாலே அறிதல். பல், நா, உதடுகளில் தட்டாமையாவது, சொல்லவாராமை. `எட்டப்படாது, எட்டப்படும்` என்பன, `எட்டாது` எனவும், ``எட்டும்`` எனவும் வந்தன.
இதனால், `முத்துரியத்துள் சிவ துரியமே முத்திக்கு வழி` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage