ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம்

பதிகங்கள்

Photo

தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

English Meaning:
If You Cannot Reach Turiya Land, Persevere Still

Reach the Turiya Land, and be there;
If you cannot reach it
Think of Lord in the Way scriptures speak of,
You shall reach the Truth
That is beyond beyond words.
Tamil Meaning:
இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.
Special Remark:
`துரியத்திற்குக் கீழ் உள்ள அவத்தைகள் தாம் மெய்ப் பொருளோடு தொடர்பில்லாத நிலை` என்பதும், `பல், நா, உதடுகளின் செயல்கள் துரியத்திற்குக் கீழ் உள்ள நிலைகளில்தான் நிகழும்` என்பதும் கருத்து. இங்குக் கூறிய துரியம் சிவ துரியம், ஏனெனில், சீவதுரியத்தில் மெய்ப்பொருள் தொடர்புறாது நிற்கும் ஆகலானும், பரதுரியத்திற்கு சென்றோர் மீளார் ஆகலானும் என்க. `இறைவனை ... ... ... தத்துவந்தான எட்டாதெனினும்நின் ரெட்டும். (ஆதலால்) துரிய நிலத்தினைத் தொட்டே இருமின்` எனக் கூட்டி முடிக்க.
``துரியம் கடந்தஇத் தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றதென் றுந்தீபற;
துறந்தார் அவர்களென் றுந்தீபற``*
``துரியம் கடந்தசுடர்த் தோகையுடன் என்றும்
பிரியாதே நிற்கின்ற பெம்மான் - துரியத்தைச்
சாக்கிரத்தே செய்தருளித் தான்செய்யும் தன்மைகளும்
ஆக்கியுடும் அன்பர்க் கவன்``*
என்பவற்றிலும், `சிவதுரியத்திற்றான் சிவன் தொடர்புற்று நிற்பான்` எனக் கூறப்பட்டது. துரியத்திலே நிலையாக நின்றால், பிரபஞ்சம் தாக்கா தொழிதலுடன், மேல் அதீதத்திற்குச் செல்லும் ஆற்றலும் உளதாகும் என்க.
இறைவனை அறியுமாற்றால் அறிதலாவது, அவன் அருளாலே அறிதல். பல், நா, உதடுகளில் தட்டாமையாவது, சொல்லவாராமை. `எட்டப்படாது, எட்டப்படும்` என்பன, `எட்டாது` எனவும், ``எட்டும்`` எனவும் வந்தன.
இதனால், `முத்துரியத்துள் சிவ துரியமே முத்திக்கு வழி` என்பது கூறப்பட்டது.