ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 31. போதன்

பதிகங்கள்

Photo

நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

English Meaning:
Lord Bestows His Grace on the Good

They think not of divine acts, Lord daily performs
They think not of the ministering acts, Lord daily performs;
The Lord daily bestows His Grace on the good,
They who know this not, daily seek Him not—
Entangled in their work-a-day Karmas interminable.
Tamil Meaning:
நாளும் நாளும் தம்பால் நிகழ்வன யாவும் சிவ பெருமான் நிகழ்த்துவிக்க நிகழ்வனவே யாதலையும் ஊன்றியுணரார்; அங்ஙனம் அவன் நிகழ்த்துவித்தல் தாம் செய்த வினையின் பயன்களைத் தமக்குத் தனது அருள் காரணமாக ஊட்டுவித்தலே யாதலையும் கேட்டல் சிந்தித்தல்களின்வழி எண்ணிப்பாரார். சிவன் தனது அருளைத் தான் நேரே வழங்குதல் மேற்சொல்லிய உண்மைகளை ஆசிரியரது அருளால் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர் கட்கே என்பதையும் எண்ணமாட்டார். யார் எனில், நாள்தோறும் முன் மந்திரத்தில் கூறிய ஐம்பாசங்களின் வழியே உழைத்து நாட்களைக் கழிக்கின்றவர் என்க.
Special Remark:
``நல்லோர்`` என்பதற்கு, `கேட்டுச் சிந்தித்துத் தெளிந்த மெய்யன்பர்` என மாதவச் சிவஞான யோகிகள் உரைத்ததனை (சிவஞான போதம், மங்கல வாழ்த்து) உன்னுக. சொற்பொருட் பின்வரு நிலையணி.
இதனுள், \\\"வினை`` என்றது ஐம்புல நுகர்ச்சிக்கு ஆவனவற்றைத் தேடலும், அவற்றை நுகர்தலுமே யாகலின் அதனை வெறுத்துக் கூறியதனால் வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டதாம்.