ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 31. போதன்

பதிகங்கள்

Photo

ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

English Meaning:
He is Beyond Tattvas Thirty-Six

To me that knew not the truth of Tattvas six times six,
He taught the truth of Tattvas six times six
He, Nandi Famed;
And when by His Grace I learned the truth of Tattvas six times six
He stood beyond the Tattvas six times six.
Tamil Meaning:
`தத்துவங்கள் சடம்` என்று அறியாமல், அவை களையே யானாக மயங்கிக் கிடந்த எனக்குச் சிவபிரான் தனது அருளைப் பற்றி நின்று அவ்வுண்மையை நான் உணர்ந்தபின் அவ்வாறு உணர்த்திய அவன் தத்துவங்கட்கு அப்பாற்பட்டு நிற்றலையும் உணர்ந்தேன்.
Special Remark:
அதற்கு முன்னே, `நான் தத்துவங்களின் வேறானவன்` என்பதை உணர்ந்தமை சொல்லவேண்டாவாயிற்று. இவ்வாற்றால் `பாசம், பசு, பதி` என்னும் முப்பொருளின் இயல்புகளை உணர்ந்தமை போந்தது. `இவ்வாறு உணரும் பொழுதே சீவன் போதனாம்` என்பது குறிப்பு.
அருளால் அறிதல், அருள்வழியாக அறிதலாம். அருளே `பதிஞானம்` எனப்படுகின்றது. பாசஞான பசுஞானங்களின் நீங்கிப் பதிஞானத்தைப் பெற்று அது வழியாக எல்லாவற்றையும் அறிந்த வழியே உண்மை இனிது விளங்குவதாகும்.
``அருளால் எவையும் பார் என்றான்; அதை
அறியாதே சுட்டி என் அறிவாலே பார்த்தேன்
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி தோழி``
என்றருளிய தாயுமான அடிகள் (ஆனந்தக் களிப்பு) வாக்கையும் நோக்குக.
``ஆறாறு`` என்பது தொகைக் குறிப்பாய் அத்துணையான தத்துவங்களை உணர்த்திற்று. சொற்பொருட் பின் வருநிலையணி.
இதனால், `போதமாவது இஃது` என்பது கூறப்பட்டது.