ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 31. போதன்

பதிகங்கள்

Photo

குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.

English Meaning:
Lord is Light

The Dancing Lord is the Light Benevolent,
He is the Joyous Light for Creation all;
He adorns the many hooded serpent with gemlike shining eyes
He is the Cluster of Lights that oversees all.
Tamil Meaning:
எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.
Special Remark:
எனவே `சீவனார் ஒரு பொழுதும் சிவனாரை அறியா விடினும், சிவனார் சீவனாரை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருக்கின்றார்` என்பதாம். `ஆகவே அவரை அறியச் சீவனார் ஆவன செய்தல் வேண்டும்` என்றபடி. `சிவன் இயல்பாகவே பாசங்கள் இன்மை, இயற்கையுணர்வு, முற்றுணர்வு என்னும் குணங்களை உடையன் ஆதலின் அவன் தனக்கு அறிவிக்கும் துணையை வேண்டாது தானே எல்லாவற்றையும் அறிவான்` என்றற்கு, ``குண விளக்காகிய கூத்தப்பிரான்`` என்றும், வேறொரு விளக்கை வேண்டாது தனது மணிகளாகிய விளக்கினாலே விளக்கத்தைத் தரும் பல தலைப் பாம்பு போல உயிர்கட்குத் தான் அறிவைத் தருகின்றான்` என்றும், `உயிர்களை இமைப்பொழுதும் நீங்காது காண்கின்ற கண் காணியாய் உள்ளான்` என்றும் கூறினார். ``மன்னுயிர்க்கு`` என்னும் நான்கன் உருபு, `கரும்பிற்கு வேலி` என்பது போல, அதற்கு வினை யுடைமைப் பொருளில் வந்தது. `தான் தோன்றி` என்பது `தானே தோன்றுதலையுடையவன்` எனப்பொருள் தருதல் போல, `கண் காணி` என்பது `கண் காணுதலையுடையவன்` எனப் பொருள் தந்தது. ``ஆகும்`` என்பதை நாகத்திற்கும் கூட்டுக. ஆக்கம் உவமை குறித்து நின்றது. இரண்டாம் அடி இன எதுகை.
இதனால், சிவன் சீவனை எப்பொழுதும் அறிந்து கொண்டே யிருத்தலால் உரிய பொழுதில் அவன் சீவனுக்கு வெளிப்பட்டு அருளச் சீவன் என்பது போதனாம் என்பது கூறப்பட்டது.