ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி

பதிகங்கள்

Photo

அங்கார் பசியும் அவாவும் வெகுளியும்
தங்கார் சிவனடி யார்சரீ ரத்திடைப்
பொங்கார் புவனத்தும் புண்ணிய லோகத்தும்
தங்கார் சிவனைத் தலைப்படு வாரே.

English Meaning:
Devotees Constant Seek Siva

Gnawing hunger, greed and anger
These bodily evils
Siva`s devotees possess not;
Neither in this world below,
Nor in the blessed world above.
Tamil Meaning:
சிவனடியார்கள் தாம் எடுத்த உடம்பிலே உள்ளா ராயினும் அதன்கண் இல்லாதவரேயாவர். அஃது எங்ஙனம் எனின் அவ்வுடம்பில் உளதாகின்ற பசி, அவா, சினம் என்பவை தம்மை வெல்லும் அளவிற்கு மிகார். ஆதலின், இன்னும் அவர்கள் இந்திரன், மால், பிரமன் முதலியோர் உலகத்திலும், சிவலோகத்திலுங்கூட அங்குள்ள போகங்களை நுகர்ந்து வாழார். மற்றுச் சிவனது திருவடி நிழலில் தலைக்கூடுதல் ஒன்றனையே செய்வார்கள்.
Special Remark:
`அதனால் பிச்சை ஏற்றலையும் செய்யார்` என்பது குறிப்பெச்சம். `சிவனடியார் சரீரத்திடைத் தங்கார்` என மாற்றி முதலில் வைத்துரைக்க. ``தங்கார்`` என்றது, எதிர்மறை வினைப்பெயர். ``பொங்கார்``, என்பதன்பின், `ஆதலின்` என்னும் சொல்லெச்சம் வருவிக்க.
இதனால், `சிவனடியார்கட்குப் பிச்சையும் மிகையேயாம்` என்பது கூறப்பட்டது.