ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி

பதிகங்கள்

Photo

பிச்சைய தேற்றான் பிரமன் தலையினில்
பிச்சைய தேற்றான் பிரியா தறஞ்செய்யப்
பிச்சைய தேற்றான் பிரமன் சிரங்காட்டிப்
பிச்சைய தேற்றான் பிரான்பர மாகவே.

English Meaning:
Why Lord Begged

The Lord begged in Brahma`s skull,
The Lord begged for Dharma to perpetuate;
The Lord begged in Brahma`s skull,
That Brahma to Brahmam become.
Tamil Meaning:
சிவபெருமான் பிரமனது தலை ஓட்டினையே கலமாகக் கொண்டு எங்கும் சென்று பிச்சையேற்றான். ஏன்? இயல்பாக அறம் செய்யாதவரும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலாகிய செயல் வாய்த்து அறம் பெறுதற் பொருட்டு. இன்னும் அஃதேயன்றி, `தானே பரம்பொருள்` என்பதை விளக்குதற்கும்.
Special Remark:
`எனவே, அவன் அடியார் பிச்சையேற்றலும் அத் தன்மைத்தேயாம்` என்பது குறிப்பெச்சம். தாருகாவன இருடிகள் கருமப்பிரம வாதிகளாய், `கடவுள் இல்லை` என்னும் மயக்க உணர்வினராய்த் தம்மனைவியர்க்கும் அக்கொள்கையினையே போதித்துவர அவர்கட்கு அம்மயக்கத்தப் போக்கி, `பரம்பொருள் ஒன்று உண்டு` என்பதையும், `அப்பரம்பொருள் தானே` என்பதையும், அவர்கட்குத் தெளிவிக்கவே சிவபிரான் திருமாலை மோகினியாகச் செய்து இருடியர்பால் அனுப்பித் தான் பிச்சைப்பெருமானாய் இருடியர்தம் பத்தினிமார் முன் சென்றான். ஆகலின் அதனையே இம்மந்திரத்தின் பின்னிரண்டடிகளில் குறித்தார். பிச்சைப் பெருமானாய்ச் சென்றது, `பரம் பொருள் ஒன்று உண்டு` என்பதை உணர்த்துதற்கும், பிரம கபாலத்தை ஏந்திச்சென்றது, `அப்பரம் பொருள் தானே` என்பதை உணர்த்தற்கும் ஆதலின் ``பிரமன் சிரங்காட்டி`` என மீளவும் அனுவதித்துக் கூறினார். முதற்கண் ``பிரமன் தலைதன்னில்`` என்றது, `தானை பரம்பொருள்` என அகங்கரித்துப் பேசிய பிரமன் தலையிழந்தான் என்பதை உணர்த்து முகத்தால், `சீவர்கள் தாங்களே எல்லாவற்றுக்கும் தலைவர் என எண்ணுதல் பிழை என்பதைக் குறித்தற்கு. இரண்டாவது அடியை, `பிரியாள் அறம் செய்ய` எனவும் பாடம் ஓதுவர். அது முன்னிரண்டடிகளை வெற்றெனத் தொடுத்தல் ஆக்குமாறு அறிக.
இதன்கண் சொற்பொருட் பின்வரு நிலையணி வந்தது. `அது` நான்கும் பகுதிப் பொருள் விகுதி. ``பிரான்`` என்பதை முன்னும் கூட்டுக. பிரிதல் - மேற்கொள்ளாதொழிதல்.
இதனால், சிவன் அடியார்கள் பிச்சை யேற்றல் சிவன் பிச்சையேற்றலை நினைப்பித்து, அதன் பயனை யெல்லாம் விளைத்தல் கூறப்பட்டது.