ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 16. பிட்சா விதி

பதிகங்கள்

Photo

வரஇருந் தான்வழி நின்றிடும் ஈசன்
தரஇருந் தான்தன்னை நல்லவர்க்கு இன்பம்
பொரஇருந் தான் புகலே புகலாக
அரவிருந் தால்`அறி யான்`என்பது ஆமே

English Meaning:
Lord Waits for His Devotees

The Lord stands waiting
For them that come seeking Him;
For the holy ones He waits
His bliss to bestow;
He stands waiting, them to enter;
Can you say ``He knows me not``

Tamil Meaning:
அடியவர்களே! கருடனுக்கு அஞ்சிய பாம்புகளே சிவனையே அடைக்கலமாக அடைந்து அதனால், ஏன் கருடா சுகமா? என்று கேட்கும் அளவிற்கு அச்சமின்றி யிருக்கின்றன என்றால், `சிவன் தன்னை அடைந்தவர்களது இன்னலை எண்ணுவ தில்லை` என்றல் கூடுமோ! கூடாது. உண்மையில் அவன் நல்லவர் கட்கு இன்பத்தை அலைவீசும் கடலைப்போல மிகத்தருவதற் காகவே இருக்கின்றான். இன்னும் அவர்கட்கு அவன் தன்னையே கொடுத்துவிடுவான். ஆகையால், அவன் ஒரு காலத்தில் தலையோட்டிலே எங்கும் சென்று இரந்தானாயினும், எப்பொழுதும் தேவரும், மூவரும், யாவரும் தன்பால் வந்து வணங்கி நலம்பெற இருத்தல்போலவே நீங்களும் பலரது இல்லங்களைத் தேடிச்சென்று இரவாது இருங்கள்.
Special Remark:
`அவன் உங்களைத் தேடி உணவு வரும்படிச் செய்வான்` என்பது குறிப்பெச்சம். ``புகலே புகலாக`` என்பது முதலியவற்றை ஈசன் என்பதற்கு முன்னர்க்கூட்டி, ``வர இருந்தான் வழிநின்றிடும்`` என்பதனை இறுதியில் வைத்துரைக்க. `இன்பம் அலைபொர என, பொருதற்கு வினைமுதல் வருவிக்க. அவ்வாறே ``வர`` என்பதற்கும் வினைமுதல் வருவித்துக் கொள்க. ``வழி நின்றிடும்`` என்றது, `அவனைப் போலவே இரும்` என்றபடி.
இதனால், `முன்மந்திரங்களிற் கூறியவாறு அடியவர் பிச்சையேற்றல் ஏற்புடைத்தாயினும், இருந்த இடத்திலிருந்தே ஏற்றல் சிறப்புடைத்து` என்பது உணர்த்தியவாறு.