ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்

பதிகங்கள்

Photo

தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
ஏனைய அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.

English Meaning:
Stages in Liberation process

The annihilating of the Self
The Self becoming He
The identity in Siva
The Mudra setting the state ultra,
All these and the rest they had,
They who received deliverance at the Feet of Nandi.
Tamil Meaning:
தற்போதம் அற்றிருத்தல், தான் சிவமேயாய் நிற்றல், சிவனல்லாத ஏனை எல்லாப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்து, அவற்றைச் சிவமாகவே காணுதல், ஞானத்தை நழுவாது நிலை நிறுத்தற்குத் துணையாய் உள்ள வேடங்களைப் பூணுதல் வாய்வாளாமை ஆகிய இவை யாவும் சிவனது திருவடிப்பேறாகிய முத்தியைப் பெற்ற நிலையின் இயல்புகளாம்.
Special Remark:
ஏனைய - மற்றையவை. எல்லாவற்றையும் சிவமாகக் காணுதலை.
``மரத்தை மறைத்தது மாமத யானை``1
என்னும் மந்திரத்துள் நாயனார் பின்னர் இனிது விளங்க அருளிச் செய்வார்.
``காதல் மடப்பிடி யோடும் களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்`` 2
என்பது முதலாக நாவுக்கரசரும் பலபட அருளிச் செய்தமை காண்க.
``பரஞானத் தாற்பரனைத் தரிசித்தோர் பரமே
பார்த்திருப்பர்; பதார்த்தங்கள் பாரார்`` 3
என்பதும் காண்க. பெற்றதன்கண் உள்ளவற்றைப் `பெற்றது` வேடத்தின் கால ஆகுபெயர்.
இதனால், ஞானம் பெற்றவழி நிகழ்வன பலவும் ஞான வேடத்தின் பாற் பகுத்துக் கூறப்பட்டன.