ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்

பதிகங்கள்

Photo

கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

English Meaning:
Siva Jnanis are Quiescent

They howl about like dogs at foot of gallows;
They peck about like vultures at carrion;
They frisk about like monkeys in merriment
They of false Jnana;
But quiescent are the Siva Jnanis true,
Dead to the world, though living in body and senses.
Tamil Meaning:
அனுபவத்தால் இன்பம் உறாது, பேச்சினாலே இன்ப மடையும் நூலறிவுடைய சிலர், கழுமரத்தடியில் நின்று அதன் உச்சியில் உள்ள உடல் எட்டாதபொழுது குரைத்தலையும், சிறிது எட்டிய பொழுது அதனைக் கடித்தலையும் செய்கின்ற நாய்களைப் போலத் தாம் அறிந்தவற்றைக் காலம், இடம், தகுதி முதலியவற்றை நோக் காமலே உரக்க எடுத்துப் பேசுதலும், காலம் முதலியன சிறிது வாய்த்த வழிக் கேட்பாரது உள்ளத்தை அலைத்தலும் செய்து திரிவார்கள். சிவஞானத்தை அனுபவமாக அடைந்தோர் வாக்கும், காயமும் வன்மைபெற்றிருப்பினும் செத்தவரைப்போலயாதும் உரையாதே, எவ்விடமும் இடமாக உலாவிவருவர்.
Special Remark:
``கழுவடி நாய்கள்போல்`` என்பது தாப்பிசையாய் முன்னரும் சென்றியைந்து. குரல் களி - குரலால் களிக்கின்ற இதுவே பாடம்; `குரக்களி` என்பது பாடமன்று என்பது உவமையால் இனி துணரப்படும். `பொறியும், உடலும் ஒத்து இருக்க` என மாற்றுக. `மூப்பொறி` என்னும் வழக்குப் பற்றி, `வாக்கு` என்னும் தொழிற் கருவியை, `பொறி` என்றார். வாக்கு வன்மைபெற்றிருத்தலாவது சொல்வன்மை வாய்த்திருத்தல். உடல்வன்மை உரத்தும், நீட்டித்தும் பேசுற்குத் துணையாகும். குரற்களி ஞானிகள் உரத்துப் பேசுதல் பயனில் செயலாம் என்பதை விளக்கவே, ``கத்தித் திரிவர்`` என்றார். வைதுரை `சொல்லம்பு` எனப்படுக் கேட்போர் உள்ளதைப் புண் படுத்தல் போல, இவரது பேச்சும் அலைவால் புண்படச் செய்யும் என்பதனை, ``கொத்தி`` என்பதனாற் குறித்தார். மனம் இன்னல் உறுதலை, `நெஞ்சு புண்ணாதல்` என்னும் வழக்குண்மையறிக. செத்து - செத்தாற் போன்று. ``திரிவர்`` மூன்றில் இறுதியது பற்றின்றி இருத் தலையும், ஏனையவை பயனின்றி வாழ்தலையும் குறித்தன. இவர்களை நாயனார் முன்பு ``சோம்பர்`` எனவும், ``தூங்குபவர்`` எனவும் குறித்தமை காண்க.
இதனால், `வாய்வாளாமையும் சிறந்ததொரு ஞானவேடப் பகுதியாம்`` என்பது கூறப்பட்டது.