ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 11. ஞான வேடம்

பதிகங்கள்

Photo

ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

English Meaning:
Jnani is a class apart

The Siva Jnani that seeks deliverance through Jnana
Is a shrine unto himself, unique of status;
He observes mauna, and so is a Mukta and Siddha;
How can other tapasvins be like unto him?
Tamil Meaning:
சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால் முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத் தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப் பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லேயன்றி மனமும் அடங்கி விட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனே யாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம். சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.
Special Remark:
`ஏனைத் தவசி சிவஞானியாகான்` எனவே, இத்தவசி (சிவஞானம் பெற்றவன்) வேடம் இன்றியும் சிவ ஞானியே என்பது பெறப்பட்டது. `அதனில்` என்பது `அத்தில்` எனமருவிற்று. ``அது`` என்றது சிவன் பாதத்தை. `இருப்பிடம்` சிவனுக்கு என்க. அஃது உயிரேயாம். மோனம் - மௌனம். அஃது இங்கு வாய் வாளாமை யோடு மனம் அடங்கியதையும் குறித்தது. `தவசியை` என்னும் இரண்டாவது தொகுத்தல் பெற்றது.
இதனால், அகத்தில் ஞானம் உடையவன் புறத்தில் வேடம் இலனாயினும் சீவன்முத்தனாய் விளங்குவன்; ஞானம் இன்றி வேட மாத்திரம் உடையவன் அத்தன்மையன் ஆகான் என்பது கூறப்பட்டது.