ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 8. அவ வேடம்

பதிகங்கள்

Photo

ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடி அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே.

English Meaning:
Men of false robes know not Siva

You fools! With false robes you deceive people
Your pretension but helps you gorge yourself fast with food;
Well may you sing and dance and weep and wail
And thus may Siva seek,
Yet never, never shall you glimpse His Feet.
Tamil Meaning:
முயலாது வைத்து வயிறு வளர்த்தலையே பயனகாகக் கருதித் தவத்தவரது பலவகைப்பட்ட வேடங்களைப் புனைந்து, அவற்றாலே பகட்டையும் மிகக் காட்டி உலகத்தாரை அஞ்சுவித்துத் திரிகின்ற அறிவிலிகாள், உலகத்தாரின் வேறுபட்ட வேடத்தைக் கொண்ட நீவிர் அதற்கியைய உண்மை அன்பால் ஆடியும், துதிப்பாடல்கள் பலவற்றைப் பாடியும், அழுதும், `சிவன் எங்கேனும் காணப்படுவானோ` என்று தேடியும் நிற்குமாற்றால் சிவனது திருவடிகளைக் காணும் பேற்றைப் பெறுங்கள் ; அது பயனுடைத்தாம்.
Special Remark:
``ஆடம்பரங் கொண்டு`` என்பதை, ``வேடங்கள் கொண்டு`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. `உண்பான்` என்பது தொழிற் பெயராய் நின்றது, `உண்பான் ஏன்` என்பது முதலிய வற்றிற்போல. `பயனாக` என்னும் ஆக்கச் சொல் எஞ்சி நின்றது. `பாடியும்` என உம்மையைத் தொகாது. ஓதுதல் கூடாமை அறிக.
இதனால், அகத்துணர்வோடு கூடாத வேடத்திற்குப் பயன் புறத்தாரை வெருட்டுதலல்லது பிறிதில்லை என்பதும், அதனால், அத்தன்மையான வேடத்தைக் கொள்ளுதல் அறியாமையாம் என்பதும் கூறப்பட்டன.