ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்

பதிகங்கள்

Photo

அதோமுக மாமல ராயது கேளும்
அதோமுகத் தாலொரு நூறாய் விரிந்து
அதோமுக மாகிய அந்தமில் சத்தி
அதோமுக மாகி அமர்ந்திருந் தானே. 

English Meaning:
Hearken to this,
How Adhomukha blossomed into a Gigantic Flower
Then, it transformed itself a hundred worlds;
And into Limitless Energy
Animating them;
And then as Adhomukha,
The Lord remained as their Support as well.
Tamil Meaning:
சிவபெருமானது அதோமுகம் பெரியதொரு தாமரை மலராய் நிற்கும் முறையினைக் கேண்மின்கள்; சுத்த மாயை யினின்றும் கீழ்நோக்கி வருகின்ற அவனுடைய அளவில்லாத சத்திகள் அதோமுகமாகி நூறிதழ்களை உடையதாய் விரிந்து நிற்க, அம்மலரின் கண்ணே சிவபெருமான் அமர்ந்திருக்கின்றான்.
Special Remark:
``நூறு`` என்றது, பன்மை குறித்தற்கு ஓர் எண் கூறியவாறு. ஒன்றாகிய சிவனது சத்திதானே காரியங்களை நோக்கிப் பலவாய் நிற்குமாதலின், அதனை ஒரு மலரின்கண்ணே உள்ள பல இதழ்களாக உருவகித்தார். `அளவிறந்த காரியங்கள்` என்றவற்றை, `வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்னும் கலைகளோடே ஒன்றின் ஒன்று வியாப்பியமாய் நிற்கும் ஏனைத் தத்துவங்களையும் எண்ணாற்கூறி, அவற்றில் நிகழற்பாலனவாகிய காரியங்களின் விரியைக் கருதி உணர்ந்துகொள்க. சத்திமான் இன்றிச் சத்தி செயற் படாதாகலின், அவன் அவற்றோடெல்லாம் இயைந்து நிற்றலையும் உணர்த்தினார். ``ஆகி`` என்றது, `ஆக` என்பதன் திரிபு. மூன்றாம் அடியை இரண்டாம் அடிக்கு முன்னே கூட்டியுரைக்க.
இதனால், `சிவபிரானது அதோமுகம் எனப்படுவது, அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிறைந்து நின்று காரியங்களைச் செய்யும் அவனது சத்தியே` என்பது கூறப்பட்டது.