ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்

பதிகங்கள்

Photo

அண்டமொ டெண்டிசை தாங்கும் அதோமுகம்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே. 

English Meaning:
He sports the garland of white skulls,
His spreading locks are matted;
He supports Universe vast,
He fills Space in directions eight,
On the throat of His Downward-directed Face
Darkness suffuses;
They say, ``He swallowed poison;``
They are ignorant, they know not the truth.
Tamil Meaning:
சிவபெருமானது அதோமுகமே நிலவுலகத்தைப் புரப்பது. அதற்கு அறிகுறியாகவே அது கறுத்த கண்டத்தையுடைய வடிவினதாய்த் தோன்றுதலை அறிபவர் ஒருவரும் இல்லை. அதனால், பலரும், `அது நஞ்சுண்டது` என்று மட்டுமே கூறி யொழிகின்றனர். இனி அவ்வடிவாகிய கறைமிடற்றண்ணலுக்கு மார்பில் அணியும் மாலையும் இறந்தாரது வெள்ளிய தலைகளால் ஆயதே. அதனது உண்மையையும் அறிவாறில்லை.
Special Remark:
``அண்டமொடு எண்டிை\\\\u2970?`` என்றது, `உலகம்` என்னும் பொருளது. `உலகம்` என வாளா கூறின், நிலவுலகத்தையே குறித்தல் வழக்கு. `அதோமுகம் தாங்கும்` என மாற்றி உரைக்க. `அதோமுகமே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அதனால் பிரிக்கப் பட்டன ஈசானம் முதலிய ஏனைத் திருமுகங்கள். ஆகவே, சுத்த மாயையில் ஐந்தொழில் செய்வனவாகச் சொல்லப்படுகின்ற அவை, நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் யாங்ஙனம்` என்பார்க்கு, `நிலவுலகத்துள்ளார்க்கு வந்து அருள்புரிதல் ஆறாவதாகிய மற்றொரு திருமுகமாம் அதோ முகமே` என மலைவு நீக்கியவாறாயிற்று.
`அதோமுகம்` என்பதற்குப் பொருள், `கீழ்நோக்கி நிற்பது` என்பதேயாகலின், அது கீழ் உலகத்தார்க்கு அருளுதல் குறித்த கருணையே என்பது சொல்லாமே அமைந்தது. ``அது கண்டம் கறுத்த கருத்தறிவார் இல்லை`` என்றதனால், `அத்திருமுகமே நிலவுலகத் தார்க்குக் கறைமிடற்றண்ணல் வடிவினதாய்த் தோன்றும்` என்பது அனுவாத முகத்தாற் பெறப்பட்டது. இதனுள் `அது` என்பது தோன்றா எழுவாய். கருத்து என்றது, `அகலரையன்றிச் சகலரையும் ஏற்றுக் கொள்ளும் கருணையது` என்பதனை.
`அஃது எவ்வாறு பெறப்படும்` எனின், மூவகைச் சீவ வருக்கத்தார்க்கும் ஆணவமலம் உளதேயெனினும், சகல வருக்கத் தார்க்கே அது பெரிதும் உளது எனப்படுவதாலும், ஆணவ மலம், `இருள், மூர்ச்சை, மிருத்து` முதலிய பெயர்கட்கும் உரித்தாய் நிற்ற லானும் இறைவனது கண்டத்தில் உள்ள கறை (இருள் - நஞ்சு) ஆணவ மலத்தை அவன் நீக்கி யருளுதற்குச் சிறந்த அடையாளமாம் என்க. இனி, அக் கறைதானும் மார்பு, வயிறு முதலிய பிற இடங்களில் நில்லாது முகத்திற்குக் கீழ்க் கண்டத்திலே நிற்றல், அஃது ஆறாவதாகிய அதோ முகத்தின் வடிவாதல் குறிக்கும். ஆகவே, `இத்துணை உண்மை களும் உணரற் பாலனவாக, அவற்றைவிடுத்து நஞ்சுண்டதாகிய வரலாற்றை மட்டுமே கூறியொழிதல் கூடாது` என்றற்கு, ``கருத்தறி வார் இல்லை; உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்`` என்றார்.
``உண்டது`` என்றது முற்று. ``நஞ்சு`` என்றதில் இரண்டாவது இறுதிக்கண் தொக்கது. இறுதிக்கண் வருவித்துரைத்த, `அதனையும் அறிவாரில்லை` என்பது இசையெச்சம். `கறைமிடற்றண்ணல் மார்பில் உள்ள மாலையாக அமைந்த வெண்டலைகள் அமரர் தலைகளே` எனப்படுதலால், `அவரும் ஏனை மக்கள் போலச் சகலரே என உணர்தல் வேண்டும்; அங்ஙனம் உணரவே, அவர் பொருட்டு நஞ்சுண்ட வரலாறு அனைத்துச் சகலர்க்கும் அருள் புரிதலைக் குறித்தல் விளங்கும்` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.
இனி, பரமசிவன் ஐந்தொழில் செய்யுங்கால் அவற்றைச் சுத்த மாயையில் தானே நேர்நின்று செய்வன்` என்பதும், `அசுத்தமாயையில் அனந்தேசுரர் வாயிலாகச் செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழிச் சீகண்ட உருத்திரர் வாயிலாகச் செய்வன்` என்பதும் ஆகமங்களின் முடிபு ஆதலால், சுத்த மாயைக்குச் சாதாக்கிய தத்துவத்தில் சதாசிவனாய் நின்று நேராகவும், அசுத்தமாயைக்குச் சுத்த வித்தியா தத்துவத்திலே வித்தியேசுரனாய் நின்று அநந்ததேவர் வாயிலாகவும் ஐந்தொழில் செய்தல் போலப் பிரகிருதி மாயைக்கும் சுத்த வித்தியா தத்துவத்திலேயே சீகண்டனாய் நின்று அனந்த தேவர் வழிச்சீகண்ட உருத்திரர் வாயிலாக ஐந்தொழில் செய்வன் என்பது பெறப்படும்; என்னை? அசுத்த மாயையில் நிகழும் காரியத்திற்கு `அனந்தர்` என்னும் வித்தியேசுரர் கர்த்திருத்துதவம் பெறுதற்குப் பரமசிவன் வித்தியேசுரனாய் நிற்றல் இன்றியமையாதவாறு போல, பிரகிருதி மாயையில் நிகழும் காரியத்திற்குச் சீகண்ட வுருத்திரன் கர்த்திருத்துவம் பெறுதற்கும் பரமசிவன் சீகண்டனாய் நிற்றல் இன்றி யமையாதாகலின். சுத்தமாயையில் போக ( பரிபாலன) மூர்த்தியாய் நிற்கும் பரமசிவனுக்கு உரித்தாய், நிற்றலின், போக தத்துவம் (சாதாக்கிய தத்துவம்) ஒன்றேயாக, அதற்குக்கீழ் அதிகார தத்துவம் அவ்வாறு ஒன்றாகாது, `ஈசுரம், வித்தை` என இரண்டாயினமை, ஒன்றுமேல் நின்று சுத்தமாயையில் அதிகாரம் புரிதற்கும், மற்றொன்று கீழ்நோக்கி நின்று அதிகாரம் புரிவித்தற்குமேயாம். முன்னையதில் கிரியாசத்தி மிக்கு நிற்றல் செயலாற்றுதற் பொருட்டு என்பதும், பின்னையதில் ஞானசத்தி மிக்கு நிற்றல் பிறரை ஏவுதல் மாத்திரையாய் நிற்றற் பொருட்டும் என்பதும் தெரிந்து கொள்ளப் படுமாறு அறிக.
பரமசிவனது `இலயம், போகம், அதிகாரம்` என்னும் மூன்று நிலைகளுள் அதிகாரம் ஒன்றாகாது `சூக்குமம், தூலம்` என இரண்டா யினமை, முறையே செய்தலும், செய்வித்தலும் பற்றியேயாம். அவற்றுள் தூலவதிகாரமாகிய செய்வித்தல் நிலையில் நிற்றற் பொருட்டே `சுத்த வித்தை` என்னும் சுத்த தத்துவம் உளதாயிற்று என உணர்க.
இனி, இலய தத்துவமும் ஒன்றாகாது இவ்வாறே தூலம், சூக்குமம் என இரண்டாவது, அபர முத்தருள்ளும் அதிகாரமல வாசனை நீங்குங்கால் தூல லயமாயும், சூக்குமலயமாயும் இவ்வாறு படி முறையானன்றி நீங்குதல் கூடாமையின், அவ்வந்திலையினின்று அவரவர்கட்கு அருளுதற்பொருட்டேயாம் என்பதும் உணர்ந்து கொள்க. இலய தத்துவம் இரண்டனுள் `சத்தி தத்துவம் தூல லயம்` என்பதும், `சிவ தத்துவம் சூக்கும லயம்` என்பதும் நன்கறியப் பட்டவை.
இனி அசுத்த மாயையிலும், பிரகிருதி மாயையிலும் பிறர்வழி நிகழ்த்தும் `ஐந்தொழில்களுள் ` அருளல்` என்பது அபர ஞானமாகிய சிவாகமங்களை அறிவுறுத்தலேயாம். பரஞானத்தை அசுத்த மாயையில் உள்ளார்க்கும் வித்தியேசுரனாயும், பிரகிருதி மாயையில் உள்ளார்க்குச் சீகண்டனாயும் நிற்கும் பரமசிவனே ஏற்றபெற்றியால் அருளுவான், என்னை? சீகண்ட உருத்திரனும், அனந்தேசுரனும் மலம் நீங்கப் பெற்ற முத்தரேயாயினும், அதிகார மலம் நீங்கப் பெறாதவரேயாதலின், மலம் முழுவதையும் பற்றறக் கழிக்கும் பரஞானத்தை அவரைப் பற்றி நின்று பரமசிவன் உணர்த்துதல் கூடாமையின், ``சகல ருக்குப் பரமசிவன் ஞானத்தை அருளுதல் சீகண்ட உருத்திரன் வழி`` என்னாது, ``ஆசான் மூர்த்தி வழியேயாம்`` என ஆகமங்கள் கூறுதலும் இது பற்றியே என்க. எனவே, பிரளயா கலருக்குப் பரமசிவன் பர ஞானத்தை அருளுதலும் இவ்வாறு ஏற்ற பெற்றியானேயாம் என்பது உணரப்படும்.
இங்ஙனமாகவே, ``அறுபான் மும்மை நாயன்மார் முதலியோர்க்குப் பற்றற்ற பரஞானத்தை அருளியவன் பரமசிவனே`` என்பதும், ஆகவே, `அவர் அடைந்த பதமுத்தி அபர முத்திகள் அவனுக்கு நேரே இடமாய சுத்த மாயையின்கண் உள்ள புவனங்கள்` என்பதும் தானே பெறப்படும். இவ்வாறு சீகண்டனாய் நிற்கும் பரமசிவனும், அவனது அருளால் அவனோடு ஒத்த உருவமும், பெயரும், பிறவும் பெற்று விளங்கும் சீகண்ட உருத்திரனும் வேறு வேறு என்பது உணரமாட்டாதார், ``அறுபான் மும்மை நாயனார் முதலாகப் பரஞானத்திற்கு உரியராய் நிற்போர்க்கு அருளுபவனும் சீகண்ட உருத்திரனே`` எனவும், ``அவர் அடைந்த முத்திப் பேறும் அவனது இடமே`` எனவும் மயங்கிப் பெறலரும் பேறு பெற்ற உயர் ஞானத்தின ராகிய பலரை ஏனைப் பொதுத் தவத்தாரோடு ஒப்ப வைத்து எண்ணுபவராவர்.
சமய தீக்கை பெற்றுச் சரியையில் நிற்போர்க்குச் சிவநூல்களை ஓதினும் தத்துவ ஞானம் விளங்காமையானும், விசேட தீக்கை பெற்றுக் கிரியையிலும், யோகத்திலும் நிற்பார்க்கு அவை விளங்குதல், ஒரு நாட்டினை நேரே சென்று காணாது அதன் படத்தைக் காண்பார்க்கு அந் நாட்டியல்பு விளங்குதல் போலப் பாவனையானன்றி உண்மையான் அன்றாகலானும் அவ்விருவர்க்கும் பரமசிவன் சீகண்ட உருத்திரர் வழியாகவே அருள் புரிபவன். நிருவாண தீக்கை பெற்றார்க்குத் தத்துவ ஞானம் உண்மையான் விளங்குமாகலின், அவர்க்குப் பரம சிவன் பற்றற்ற பரஞானத்தால் சீவன் முத்தராய் நிற்கும் ஆசான் மூர்த்தி களது சுத்தான்ம சைதன்னியத்தில் விளங்கி அவராய் நின்றே அருள் புரிவன். ஆகவே, சமய தீக்கையின்பின் விசேட தீக்கை பெற்றுக் கிரியை அனுபவமும், யோக அனுபவமும் பெற்றார்க்குச் செய்யப் படும் நிருவாண தீக்கையே உண்மை நிருவாண தீக்கையாம். ஏனை யோர்க்கு அதனைச் செய்தல் நாடக மாத்திரையேயாம். இன்னும் முன்னைப் பிறவியிலே ஆசான் அருள்பெற்று நிட்டைகூட மாட்டாத வராய் அது கூடுதற் பொருட்டு நிலவுலகில் பிறந்தார்க்கும் சீகண்ட னாய் நிற்கும் பரமசிவன் தானே நேர் நின்று அருள்புரிவன் என்க.
மேன்மேல் உள்ள தத்துவங்கள் கீழ்க்கீழ் உள்ள தத்துவங் களினும் வியாபகமாவன வேயன்றி, இயைபின்றி மேலே நிற்பன அல்ல என்பது மேலேயும் (388, 407 பாடல்கள்) காட்டினாம் ஆதலின், இங்குக் கூறப்பட்டன அனைத்தும் பொருந்துவனவாதல் அறிந்து கொள்க.
சமயம் முதலிய மூவகைத் தீக்கைகளைப் பெற்றச் சரியை முதலிய நான்கினும் நிற்போர் திருக்கோயில் வழிபாட்டினைச் செய் தும், செய்வித்தும் நிற்கும் பொழுது பரமசிவனைத் தத்தம் இயல்பிற்கு ஏற்பவே உணர்ந்து நிற்பராகலான், பரமசிவனும் அவர்தம் உணர் விற்கு ஏற்ப மேற்கூறிய முறையானே அங்கு நின்று அருள் புரிவன் என்பது,
``திருக்கோயி லுள்ளிருக்கும் திருமேனி தன்னைச்
சிவன்எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே;
`உருக்கோலி மந்திரத்தால்` என நினையும் அவர்க்கும்`
`உளன் எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்`
விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்
மந்திரத்தில் வந்துதித்தும், மிகும்சுரபிக் கெங்கும் உருக்காண; ஒண்ணாத பால்; முலைப்பால் விம்மி
ஒழுகுவது போல் வெளிப்பட்டருளுவன் [அன்பர்க்கே
எனச் சிவஞான சித்தியுட் (சூ. 12.4) கூறப்படுதல் காண்க.
இதனால். சிவபெருமான் கீழுலகத்துள்ளார்க்கு அதோ முகத்தின் வழியாகவே அருள் புரிதல் கூறப்பட்டது.