ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 20. அதோமுக தரிசனம்

பதிகங்கள்

Photo

நந்தி எழுந்து நடுவுற ஓங்கிய
செந்திக் கலந்துட் சிவனென நிற்கும்
உந்திக் கலந்தங் குலகம் வலம்வரும்
அந்தி இறைவன் அதோமுக மாமே. 

English Meaning:
Inside Primal Fire that is Siva
Nandi rises in the centre, gleaming
He pervades worlds all,
His hue is of the twilight sun
Who the world in glory ambulates,
He is the Lord of the Downward-looking Face—
Adhomukha.
Tamil Meaning:
சிவபெருமானது அதோமுகம் வடதிசைத் தீ, (ஆகவநீயம் தென்றிசைத்தீ, (தக்கிணாக்கினி) என்னும் இரண்டற்கும் நடுவிலே இல்லத் தீ, (காருகபத்தியம்) எனப் பெயர்பெற்று வளர்ந்து எரிகின்ற தீயினுள் நின்று அதனைச் சிவாக்கினியாகச் செய்யும். இனி ஏனைய இரண்டு தீயினுள்ளும் சென்று கலந்து உலகம் முழுதும் பரவியும் நிற்கும்.
Special Remark:
எனவே, ``நிலவுலகில் இல்லத்து வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும், திருக்கோயில்களில் வைத்துச் செய்யும் வழிபாட்டில் நின்று அருள்புரிவதும் சிவபெருமானது அதோ முகமே`` என அத்திருமுகம் நிலவுலகத்தார்க்கு அருள் புரியும் வகைகளைக் கூறியவாறாயிற்று. ``செந்தீ`` என்றே போயினாராயினும், அதன் வடிவாய்ப் பல பொருள்களால் அமைந்த இலிங்கங்களையும் கூறியதேயாம்.
``இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை``
-தி.8 திருவெம்பாவை, 17
``நின் அடியார் பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே``
-தி.8 திருப்பள்ளியெழுச்சி
என்றாற் போலும் திருமொழிகள் இறைவன் தன் அடியவர் இல்லத்துக் கொண்ட குறியினுள் நின்று அருள்புரிதலைக் குறிப்பனவேயாம். அக்குறியை அந்தணரும், ஆசாரியரும் நித்தியாக்கினியாகவும், ஏனையோர் ஆன்மார்த்த லிங்கமாகவும் கொள்வர் என்க. ``செந்தீ`` என்பது குறுகிநின்றது.
இனி, ``நடுவுற ஓங்கிய செந்தீ`` என்றதும், ``உந்திக் கலந்து அங்கு உலகம் வலம்வரும்`` என்றதும் முறையே அகத்தே இருதயத்துள் சுடர்வடிவில் நிற்றலையும், மூலாதாரத்தினின்று, சுவாதிட்டானம், மணிபூரகம் முதலாக மேலோங்கி உடல் முற்றும் பரவும் மூலாக்கினியையும் குறித்துப் பொதுமையில் நிற்பனவேயாம். அதனால், கிரியையாளர் செய்யும் அகவழி பாட்டிலும், யோகியர்கள் செய்யும் யோக பாவனைகளிலும் நின்று அவர்க்கு அருள்புரிவதும் அவ்வதோமுகமே என்பதும் பெறப்பட்டது. ``உலகம் வலம் வரும்`` என்று உடலையும் உலகம் போலவே கூறியொழிந்தது, சிவபெரு மானது அதோ முகத்துடன் தோன்றிய அறுமுகக் கடவுள் ``உலகத்தை யெல்லாம் ஒரு நொடியில் வலம் வந்தான்`` என்ற புராண வரலாறும் இவ்வுண்மையையே விளக்கும் என்பது தோன்றுதற்கு. அந்தி இறைவன் - அந்திச் செவ்வானம் போலும் நிறமுடைய சிவன். ``காலை, நண்பகல், அந்தி`` என்னும் காலங்களில் செய்யும் வழி பாடுகளில் அந்தியில் வழிபடப்படும் இறைவன் என்றலுமாம்.
இதனால், அதோமுகம் நிலவுலகத்தார்க்கு நின்று அருள் புரியுமாறெல்லாம் கூறப்பட்டன.