ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்

பதிகங்கள்

Photo

வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
கோள்கொடுத் தின்பங் கொடுத்துக்கோ ளாகத்தன்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே. 

English Meaning:
The Lord granted the Sword of Protection
To Beings Celestial that prayed to Him
But they know Him not entire
As I who His vassal became;
He granted me Himself
He granted me Bliss
And His Feet`s grace as final prize;
They approach not His Feet thus.

Tamil Meaning:
சிவபெருமான் திருமால் முதலிய தேவர்க்கும், இராவணன் முதலிய அரக்கர்க்கும் படைக்கலங்களை அளித் தருளிய செய்தியை அறிந்து அவ்வாறே தாமும் பலவற்றைப் பெற விரும்பி அவனை வழிபடுகின்ற தேவர்கள், எம்மைப் போல அவனுக்குத் தம்மை ஆளாகக் கொடுத்து அன்பினால் அவனை நினைப்பதில்லை. அதனால், தன் அடியார்களுக்கு முதலில் ஞானத்தைக் கொடுத்து, பின் பேரின்பத்தைத் தந்து, என்றும் புகலிட மாகத் தனது திருவடியை வழங்குகின்ற அவனது திருவடியை அத் தேவர்கள் காண்பதில்லை.
Special Remark:
கோள் - கொள்ளப்படும் பொருள். மூன்றாம் அடியிலும் ``ஆள்கொடுத்து`` என ஓதுதல் பாடம் அன்று.
இதனால், மேல், ``கோலிங்கு அமைஞ்சருள் கூடலுமாமே`` என்றவாறும், ``வானிடத்தவரும் மண்மேல் வந்தரன்றனை அற்சிப்பர்`` (சிவஞானசித்தி சூ. - 2.92) என்றவாறும் இவ்வுலகில் தேவர் பலர் வந்து சிவபெருமானை வழிபட்டமை அறியப்படுகின்ற தாயினும், அவர் தம் வழிபாடு பயன் கருதாத அன்பு வழிபாடாகாமையால், சிவபெருமான் அவர்கட்கு அரியனே ஆகின்றான் என, மால் அயன் என்பவரோடு, இனம்பற்றி ஏனைத் தேவரும் சிவபெருமானை வழிபட்டும் அவனை அறியாரா யினமைக்குக் காரணம் கூறப்பட்டது.