ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்

பதிகங்கள்

Photo

சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்
மூவடி தாவென் றவனும் முனிவரும்
பாவடி யாலே பதஞ்செய் பிரமனும்
தாவடி யிட்டுத் தலைப்பெய்யு மாறே. 

English Meaning:
Vishnu, adored of the Devas,
That asked of Mahabali for three feet land And Brahma
Whom the Rishis in hymnal praise please,
The two in ego contended
For primacy to gain.
Tamil Meaning:
சிவபெருமானிடம் எஞ்ஞான்றும் குறையிரத்தற்குக் கூடுபவர்களாகிய தேவர்களுட் சிலராகிய, மாவலியை நேரே பொருது வெல்லமாட்டாது வஞ்சனையால் மூவடி மண் இரந்து வென்ற மாயோனும், தானே அறிந்து படைக்கமாட்டாது வேதப் பாக்களை உருச்செய்து அறிந்து உலகங்களைப் படைக்கின்ற பிரமனும், அவருட் சிலரை நோக்கித் தவம்செய்து சிலவற்றைப் பெறும் முனிவர்களும் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எதிரிட்டுக் காண வல்லராவரோ!
Special Remark:
``முனிவர்`` என்றது, கருமகாண்டிகளை. அவர் தேவரைத் தெளியாராயினும், அவரை நோக்கிச் செய்யும் கருமங்கள் பயன் தரும் என்னும் தெளிவுடையர். இறுதிக்கண் கூறற்பாலராய அவரைச் செய்யுள்நோக்கி இடையே கூறினார். தா அடி, படைவீரர் போர்க்கு அணிவகுத்து நடக்கும் நடை. அஃது இங்குச் செருக்கினால் எதிரிட்டுக் காண முயலுதலைக் குறித்தது. தலைப்பெய்தல் - சந்தித்தல்; காணுதல். இறுதிக்கண், `கூடுமோ` என்பது சொல்லெச்சம். `வான வரும்` என்னும் உம்மை தொகுத்தல்.
இதனால், அயன், மால் என்பவரோடு இனம்பற்றிப் பிறரது சிறுமைகளும் தோன்றக் கூறப்பட்டன.