ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 8. அடிமுடி தேடல்

பதிகங்கள்

Photo

பிரமனும் மாலும் பிரானேநான் என்னப்
பிரமன்மால் தங்கள்தம் பேதைமை யாலே
பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க
அரனடி தேடி அரற்றிநின் றாரே.

English Meaning:
In ignorance gross, Brahma and Mal
Each bragged as Lord Supreme;
Then as a pillar of Fire the Lord stood before them
And they search and scream
In vain His Feet to behold.
Tamil Meaning:
பிரமனும், திருமாலும் `நானே கடவுள், நானே கடவுள்` என்று சொல்லிப் போர் புரிய, அவர்களது பேதைமையை நீக்குதற் பொருட்டுச் சிவபெருமான் அனற் பிழம்பாய் ஒளிவீசி நிற்க, அவ்விருவரும் அவனது திருவடியைத் தேடிக் காணாமல் புலம்பினர்.
Special Remark:
இவ்வரலாறு மேலே காட்டப்பட்டது. (தி.10 பா.345) `நானே பிரான்` என மாற்றித் தனித்தனிக் கூட்டி உரைக்க. பின்னும், ``பிரமன் மால்`` என்றது சுட்டுப் பெயரளவாய் நின்றது. தங்கள் தம் பேதைமை - தம் தம் பேதைமை. `பேதைமையாலே நிற்க` என்றது, ``கள்வனால் திரண்டனர் மக்கள்` என்பதுபோல நின்றது. ``அரனடி தேடி`` என, அடியை மட்டுமே குறித்தது, அவ்வரலாற்றைத் தொகுத்துக் கூறியபடி. ``அரற்றுகின்றாரே`` என்பதே பாடமாக ஓது கின்றனர்.
இதனால், சிவபெருமான் பேதைமையாளர்க்கு அறிய ஒண்ணாதவன் என்பது கூறப்பட்டது.