ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு

பதிகங்கள்

Photo

கோழை ஒழுக்கங் குளமூடு பாசியில்
ஆழ நடுவார் அளப்புறு வார்களைத்
தாழத் துடக்கித் தடுக்ககில் லாவிடில்
பூழை நுழைந்தவர் போகின்ற வாறே. 

English Meaning:
Irretrievable Loss in Lust
Those unfirm of mind who, in folly vain,
Indulge in sex
If such betimes we bind not and restrain,
Irretrievably lost are they in lust of sex, sordid and rank.
Tamil Meaning:
வீரம் இல்லாத ஒழுக்கத்தால் பொது மகளிர் மயக்கத்தில் ஆழநினைத்து அதன்பொருட்டுத் தம் பொருளை அளக் கின்ற பேதையரை அறிவுடையோர் இடித்து வரை நிறுத்தி விலக்குதல் வேண்டும். அவ்வாறு செய்யாவிடில், அவரது நிலைமை படுகுழியில் வீழ்ந்தவர் மீளமாட்டாது அழுந்தியொழிதல் போல்வதேயாம்.
Special Remark:
எனவே, `படுகுழியில் வீழ்வாரை விலக்காதொழிந்த பாவம் அறிவுடையோர்க்கு உண்டாகும்` என்பது கருத்தாயிற்று. கோழை - உரன் (திட்பம்) இன்மை. அஃதாவது மனத்தை அடக்கும் வலி இன்மை. `ஒழுக்கத்தால்` என உருபு விரிக்க. `குளம் மூடு பாசியில்` என்றாராயினும், `பாசி மூடு குளத்தில்` என்றலே கருத்து என்க. இஃது உருவகம், `நாடுவார்` என்பது குறுகிநின்றது. நாடுவார், முற்றெச்சம். குளம், இயல்பால் விரும்பி ஆடத்தக்கதெனினும், பாசியால் மூடப்பட்டவாற்றால் இகழ்ந்தொதுக்கப்படுதல் போல, மகளிர் இயல்பால் விரும்பிக் கூடத்தக்கவர் எனினும், வரைவில் ஒழுக்கத்தால் இகழ்ந்தொதுக்கப்படுவர் என்றற்குப் பொதுமகளிரை, பாசி மூடிய குளமாக உருவகித்தார். இக்குளத்தில் மூழ்கினார் மாசு தீராமையேயன்றி மாசு மிகப்பெறுதலும் உடையாராவர் எனினும், ஒருகால் மீண்டு வருதல் உண்டு; பொதுமகளிர்தம் இன்பத்தில் ஆழ்ந்தவர் பழி பாவங்களை எய்தன்மேலும், மீள அறம் பொருள்கட்கு உரியராகாது வெறுவியராவர் என்றற்கு, ``பூழை நுழைந்தவர் போகின்றவாறே` என வேறும் ஓர் உவமை கூறினார். இவற்றையும் கோவலன் வரலாறு முதலியவற்றான் அறிந்துகொள்க.
இதனால், பொதுமகளிரது கூட்டம் உய்தியில் குற்றமாய் முடியும் என்பது கூறப்பட்டது.