ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 12. மகளிர் இழிவு

பதிகங்கள்

Photo

இயலுறும் வாழ்க்கை இளம்பிடி மாதர்
புயனுறப் புல்லிப் புணர்ந்தவர் எய்தும்
மயலுறும் வானவர் சார்விது என்பார்
அயலுறப் பேசி அகன்றொழிந் தாரே. 

English Meaning:
Women`s Charms unreliable
A damsel full of charm and tempting like a she-elephant;
May embrace a lover with the ardour of grass that has received rain
But if another looking more handsome like a celestial,
She will ask the first lover to wait and desert him.
Tamil Meaning:
ஒருவனிடத்து நில்லாது பலரிடத்துச் செல்லு தலையே வாழ்க்கையாக உடைய பொது மகளிரது தோளை மிகத் தழுவிக் கலந்த ஆடவர், தாம்கொண்ட மயக்கத்தால், `நாம் அடையத் தக்க சுவர்க்க இன்பம் இதுவன்றி வேறில்லை` என்று கூறுவர். ஆயினும், அவர்தாமே அம்மகளிரைத் தமக்குச் சிறிதும் தொடர்பில் லாதவராகப் பேசி விலகி ஒழிவதைப் பார்க்கின்றோம்.
Special Remark:
`இவ்விரண்டனுள் முன்னது பொருள் இருந்த காலத்து நிலைமை; பின்னது பொருள் அற்ற காலத்தில் உண்டாம் நிலைமை` என்பது கருத்து. இளம்பிடி, நடைக்கு உவமை, அன்னதொரு நடையாலும் ஆடவரை மயல்கொள்ளச்செய்தல் குறித்தவாறு. `மயலால்` என உருபு விரிக்க. அயல் - அயன்மை. அஃது உறுமாறு பேசி அகன்றமையைக் கோவலன் வரலாற்றாலும் உணர்க. அயலுறப் பேசுதல், அவர் பொருளுடையார் பக்கம் போதலைக் காணும் பொழுதாம். ஆகவே, `பொருட் பெண்டிராகிய அவரது பொய்ம் முகத்தால் மயங்கலாகாது` (குறள் - 913) என்பதாம்.
இதனால், பொதுமகளிரது நிறைஇன்மை கூறி, மயக்கத்தால் அவ்விழிபினை மறந்து அவரை விழைதல் கூடாது என்பது கூறப் பட்டது.