ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு

பதிகங்கள்

Photo

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாஞ்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 

English Meaning:
Supreme Path
The Lord is neither cit not acit; He is the path Supreme,
If we meditate on Him He will bestow on us grace,
This is the only path, Supreme path, says Vedanta.
Tamil Meaning:
`வீட்டு நெறியாவது, ஞானாசிரியன்வழி உளதாவதாய், சித்தும், அசித்தமாய் இருதிறப்பட்டு நிற்கும் உலகத்தை நினையாமல், அவை அனைத்தையும் கடந்து நிற்கும் சிவபெருமான் ஒருவனையே நினைந்து அவனாந் தன்மையைப் பெறுகின்ற ஒரு நெறியே` என வேத முடிவு ஒருதலையாக அறுதியிட்டுக் கூறும்.
Special Remark:
`அதனால், வேதத்தைச் செய்தவன் சிவபெருமானே` என்பது குறிப்பெச்சம். `திரு` என்பது வீடாதலை `போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7 ப.59 பா.1) என்பதனுட் காண்க. வியாபக நிலையை, ``பெரு நெறி`` என்றார். ``சிவமாம் நெறி`` எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ``பிரான்`` என்று போயினார். ``குருவே சிவம்`` (தி.10 ஆறாம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவாராகலின், ``குருநெறிஆம்`` என்றது, `அவனருளால் அல்லது கிடைக்கப்பெறாத` என்றவாறு. ``ஒருநெறி`` என்றதன்பின், `என்று` என்பது எஞ்சிநின்றது. `பிரானையே, ஒருநெறியே` என்னும் பிரிநிலை ஏகாரங்கள் தொகுத்தலாயின. `திருநெறியாவது சிவமாம் நெறி கூடும் ஒருநெறியே` என வேதாந்தம் கூறுதல், ``பிற எல்லாவற்றையும் விடுத்துச் சிவன் ஒருவனே தியானிக்கப்படத் தக்கவன்; அதர்வ சிகை முற்றிற்று`` ``ஸிவ ஏகா தியேயக சிவங்கர ஸர்வ மன்யத் பரித் யஜ்யேதி ,மாப் தார்த்த வஸிஹா`` என்று வேதாந்தம் (அதர்வசிகோப நிடத முடிவு) இறுதியிற் கூறி முடிதலால் அறியப்படும்.
இதனால் மேல் பாரிசேடத்தாற் பெறப்பட்டதனைப் பொருந்து மாற்றின் வைத்துணர்த்தி வலியுறுத்தல் செய்யப்பட்டது. இதனானே, சிவமாம் நெறியாகிய திருநெறியது இயல்பும் தொகுத்துணர்த்தப் பட்டவாறு அறிக.
திருஞானசம்பந்தரது, ``அருநெறிய மறை`` (தி.1 ப.1 பா.11) என்னும் திருப்பாடல் இத்திருமந்திரத்தை அடியொற்றிச்செல்வதாய் இருத்தலும், அவர் தமது பாடலை, ``திருநெறிய தமிழ்`` என்று குறித்திருத்தலும் இங்கு நினைவுகூரத் தக்கன.