ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு

பதிகங்கள்

Photo

வேதம் உரைத்தானும் வேதிய னாகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்கா
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே.

English Meaning:
Truth Of Maker
Brahma spoke the Vedas, but Himself is not the author thereof;
He spoke the Vedas only the great Maker to reveal;
He spoke them for the Holy, sacrifices to perform,
He spoke them, the True One to manifest
Tamil Meaning:
வேதத்தை எப்பொழுதும் ஓதுபவனாகிய பிரமனும் வேதத்தைச் செய்தவனாயினானில்லை. ஏனெனில், வேதத்தைச் செய்தவன் அதனைச் செய்தது, அப்பிரமன் அதனை ஓதி அறிவு விளங்கப் பெறுதற் பொருட்டும், மற்றும் கன்மத்தில் விருப்பம் உடைய வர்க்கு வேள்விகளை உளவாக்குதற்பொருட்டும், மெய் யுணர்வு பெற விரும்புவோர்க்கு மெய்ப்பொருளை உணர்த்தற் பொருட்டுமாம்.
Special Remark:
`பிரமன் வேதத்தால் அறிவு விளங்கப்பெறுதல், அவன் அதனை இடையறாது ஓதுதலால் அறியப்படும்` என்றற்கு, அவனை `வேதம் உரைத்தான்` என்னும் பெயராற்கூறினார். உம்மை நான்கனுள் முதலது, சிறப்பு; ஏனையவை எச்சம். `வேதத்தை ஓதி அறிவு விளங்கப் பெறுபவன், அவ்வேதத்தைச் செய்தவனாதல் எவ்வாறு` என்றற்கு, ``வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட`` என்றார். இக்கருத்தால் இது கூறப் புகுந்தவர், வேதத்தால் உளவாகும் ஏனைய பயன்களையும் உடன் கூறினார் என்க. இப்பயன்களது சிறப்பை வலிறுத்தற்கு எச்ச உம்மை புணர்த்து வேறு வேறு தொடராற் கூறினார். அவ்வும்மைகட்கு முன் `உரைத்தது` என்பன சொல் லெச்சமாய் எஞ்சிநின்றன. இதனால் `வேத்தைச் செய்தவன் பிரமன் எனக் கூறும் ஐரணிய கருப்பமத`த்தவர் முதலாயினவர் கூற்றும் பொருந்தா` என்பதும், `வேதத்தின் பயன் இவை` என்பதும் கூறப்பட்டன. இதனானே வேதம் ஒருவராலும் செய்யப்பட்டதன்று என்னும் மீமாஞ்சகரது கொள்கையும் பொருந் தாமை பெறப்பட்டது.