ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு

பதிகங்கள்

Photo

இருக்குரு வாம்எழில் வேதத்தி னுள்ளே
உருக்குணர் வாயுணர் வேதத்துள் ஓங்கி
வெருக்குரு வாகிய வேதியர் சொல்லுங்
கருக்குரு வாய்நின்ற கண்ணனு மாமே. 

English Meaning:
Moving Mood
In the beauteous Veda, aptly named the Rik
As the moving mood behind, He stood;
In the thrilling chant of the Vedic priests He stood,
Himself the Eye of vision Central.
Tamil Meaning:
பூனையை ஒத்த புறத்தோற்றம் உடைய வேதியர்கள் சொல்கின்ற, பிறப்பை உடைய ஆசிரியனாகிய மாயோன் றானும், மந்திரவடிவாகிய எழுச்சியான ஓசையை உடைய கன்ம காண்டத்துள் உள்ளத்தை உருக்குகின்ற அன்புருவாயும், ஞான காண்டத்துள் கேள்வி, ஆய்வு முதலியவற்றால் துணியப்படும் மெய்ப் பொருளாயும் உயர்ந்து நிற்பவனாவனோ? ஆகான்.
Special Remark:
`அதனால், அவனும் வேதத்தைச் செய்தவன் ஆகான்` என்றபடி. வேதத்தின் பாகங்களையும் `வேதம்` என்றல் வழக்கு. உருக்கு உணர்வு, அன்பு உணர்வேதம், உணரப்படும் வேதம். ``ஓங்கி`` என்றது பெயர். `வேதம் முதல் நூலாதலின், அதனைச் செய்தவன் யாவர்க்கும் முன்னோனாய தன்னிகரில்லாத் தனிப்பெருந்தலைவனேயாதல் வேண்டும். அதனால், அவன் தனது தன்மையை உணர்ந்து தன்னைச் சாரமாட்டாத பிறர்க்கு அன்பினானும், ஆராய்ச்சியானும் தன்னை அடையுமாற்றையே அந்நூலுட் கூறியிருத்தல் வேண்டும். ஆகவே, அவன் அதன் கன்ம காண்டத்துள் அன்பிற்கும், ஞானகாண்டத்துள் அறிவிற்கும் பற்றாய் நிற்றல் வேண்டும். அத்தன்மை பிறப்பினுட்பட்டு நிற்கும் மாயோனுக்கும் கூடாது` என்பார், ``கருக் குரு வாய் நின்ற கண்ணனும் ஆமே`` என்றார். ``கரு`` என்றது பிறப்பை. ``கருக்குரு`` என்றதை, `கருவை உடை குரு` என விரிக்க. `கருவில் வீழ்பவன் குருவாகமாட்டான்` என்பது குறிப்பு. `கண்ணன்` மாயோன்` என்பன ஒருபொருட்சொற்கள். ``கண்ணனும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. `ஆமே` என்ற வினா, `ஆகான்` என எதிர்மறைக்கண் வந்தது. `கண்ணனும் உருக்குணர்வாய் ஓங்கி ஆமே` எனக் கூட்டுக.
வரையறை இன்மையின், ``வெருக்குரு`` என, வேற்றுமைப் புணர்ச்சியுள் நிலைமொழியில் சிறுபான்மை ககரம் இரட்டிற்று. ``வெருக்குக்கண்`` (நாலடியார் 210) எனப் பிறவிடத்தும் வந்தது. `பிரமத்தை உணர்ந் திருத்தலால் பிராமணர் எனவும், பிரமஞானம் மிக்கிருத்தலால் விப்பிரர் எனவும் சொல்லப்படுகின்றோம்` என்று சொல்லிக்கொண்டு, பிரமமாகிய சிவபெருமானைச் சிறிதும் உணர்ந்து அன்பு செய்யாமலே, மாயோன் முதலியோரையே புகழ்வதோடு சிவபெருமானை இகழ்வதும் செய்துகொண்டே, நூலும் சிகையும் முதலாய தோற்றத்தால் மட்டும் சிலர் பிராமணராய் நிற்றலின், அவரது தோற்றத்திற்குத், தவத்தோடு சிறிதும் இயைபின்றி அதற்கு மாறாய் நின்று கொண்டே தோற்றத்தால் பெரிதும் தவமுடயைது போலத் தோன்றுகின்ற பூனையினது தோற்றத்தை உவமை கூறினார். பிராமணருட் சிலர் இவ்வாறு நிற்றற்குக் காரணம், ததீசி, கௌதமர் முதலிய முனிவர் சிலரது சாபம் என்பதைக் காந்தம், கூர்மம் முதலிய புராணங்களுட் காண்க.
இதனால், `வேதத்தை மாயோன் இயல்பாய் நின்றே செய்தான்` எனப் பாஞ்சராத்திரிகளும், `வியாதனாய் அவதரித்துச் செய்தான்` எனப் பௌராணிகரும் கூறுங் கூற்றுக்கள் பொருந்தா என்பது உணர்த்தினார். `வேதத்தைச் செய்தவன் பிரமனு மல்லன்; மாயனுமல்லன், என்பதைப் பொருந்துமாற்றின் வைத்து உணர்த்தி, `அது செய்தவன் சிவபெருமானே` என்பதைப் பாரிசேடத்தாற் பெறுவித்தார் என்க. வியாச முனிவன் வேதத்தை வகைப்படுத்திய தல்லது செய்திலாமை அறிக.