ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 2. வேதச் சிறப்பு

பதிகங்கள்

Photo

வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடுபெற் றார்களே. 

English Meaning:
GREATNESS OF VEDAS
Vedas Proclaim Dharma
No Dharma is, barring what the Vedas say;
Its central core the Vedas proclaim;
And the Wise ones ceased contentious brawls,
Intoned the lofty strains and Freedom`s battle won.
Tamil Meaning:
`அறவேட்கை உடையேம்` எனத் தம்மைப் பற்றிச் சொல்லிக்கொள்வார் சிலர், `வேதத்திற் சொல்லப்படாத அறமும் உண்டு` எனக் கூறுவராயினும், அஃது உண்மையன்று; வேதத்திற் சொல்லப்படாத அறம் யாதொன்றும் இல்லை. மக்கள் ஓதி உணர வேண்டுவனவாய எல்லா அறங்களும் வேதத்திலே உள்ளன. அதனால், அறிவுடையோர் பலரும் வேதத்தை மறுத்துச் செய்யும் சொற்போரை விடுத்து எல்லாச் சொல்வளமும், பொருள்வளமும் உடைய வேதத்தை ஓதியே வீடடையும் நெறியைப் பெற்றார்கள்.
Special Remark:
`கொல்லாமையே சிறந்த அறம்; அது வேதத்துள் இல்லை` எனக் கூறும் புத்த சமண மதத்தவரது கூற்றை உட்கொண்டு கூறியது இத்திருமந்திரமாதலின், இதற்கு இவ்வாறு உரைக்கப்பட்டது. வேதத்துள் ஊன் வேள்வி கூறப்பட்டதாயினும், வேதம் பல்வேறு திறத்தார்க்கும் அவரவர்க்கு ஏற்புடைய அறங்களைக் கூறுவதாகலின், அதனுட் கூறப்பட்ட அறங்கள் அவ்வத்திறத்தார்க்கே உரியனவன்றி, எல்லா அறங்களும் எல்லார்க்கும் உரியன அல்ல; அவ்வாற்றால், ஊன் வேள்விகளும் அவற்றிற்கு உரியாரை நோக்கியே கூறப்பட்டன என்பதும், ஊன் வேள்வியன்றித் தூய வழிபாடுகளும், தூய நோன்பு களும் அவற்றிற்கு உரியாரை நோக்கி வேதத்திற் கூறப் பட்டுள்ளன என்பதுமே வேதத்தை உடன்பட்டோர் துணிபாகலின் ``வேதத்தை விட்ட அறமில்லை`` என்பது முதலியவற்றால் வேதத்தின் சிறப்பை வலியுறுத்தினார் நாயனார். திருவள்ளுவ நாயனாரும்,
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. -குறள் 259
என `ஊன்வேள்விகள் உயர்ந்தோர்க்கு உரியன அல்ல என்பது மாத்திரையே கூறியதல்லது, `ஒருவர்க்கும் ஆகாது` என முற்றக் கடிந்து கூறினாரல்லர். ஊன் வேள்விகளை அறிவுடையோர் விலக்கா மைக்குக் காரணம், அவற்றாலும் சிலர்க்குக் கடவுள் உணர்ச்சி உள தாதல் பற்றியேயாம். புத்த சமண மதங்கள் கடவுட் கொள்கை இல்லாத மதங்களாதலின் அவை அவற்றை மறுக்கு முகத்தான் கடவுள் வழி பாட்டினையே மறுப்பனவாயின. அன்றியும், ஊன் வேள்வியை விலக்குதலைத் தம் மதத்தினைப் பரப்புதற்குத் தக்கதொரு கருவி யாகவுங் கொண்டு தம் ஆரவார உரைகளைப் பெருக்கின என்பது, ``கொல்லாமை மறைந்துறையும் அமண்சமயம்`` (தி.12 திருநாவுக் கரசர் புராணம். 37) என்ற சேக்கிழாரது திருமொழிக் குறிப்பால் நன் குணரலாம்.
``வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆத மில்லி அமணொடு தேரரை`` -தி.3 ப.108 பா.7
என்னும் திருமொழியும் இக்கருத்தே பற்றி எழுந்தது.
`கடவுள் வழிபாடு உயிர்க்கொலையோடு கூடாது நிற்றலே சிறப்பு; கூடினும் அமைக` என்பது வேத மதங்களின் கருத்து. `கடவுள் வழிபாடு செய்யப்படாது ஒழியினும் ஒழிக; உயிர்க் கொலை கூடாது` என்பது புற மதங்களின் கொள்கை. `இப்புறமதக் கொள்கையால் ஒழிவது கடவுள் வழி பாடேயன்றி உயிர்க்கொலையன்று` என்பதை ஊன்றியுணரவல்லார்க்கு, அம்மதங்களால் விளையும் தீங்கு புலனாவ தாகும். அது நோக்கியே அறிவுடையோர் அனைவரும் வேதத்தை உடம்பட்டு ஒழுகினர் என்க.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். -குறள் 543
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவான் எனின். -குறள் 560
என்பவற்றால் திருவள்ளுவ நாயனாரும் வேதத்தை உடம்பட்டமை புலனாகும். ``வேதத்தில் அறம் எல்லாம் உள`` என்றதனால், `வேதம் அறத்தைக் கூறும் பொது நூல்` என்பது பெறப்பட்டது.