ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. பலியும் அவியும் பரந்து புகையும்
    ஒலியுய்எம் ஈசன் றனக்கென்றே உள்கிக்
    குவியும் குருமடம் கண்டவர் தாம்போய்த்
    தளிரும் மலரடி சார்ந்துநின் றாரே.
  • 2. இவன்இல்லம் அல்ல(து) அவனுக்கங் கில்லை
    அவனுக்கு வேறில்லம் உண்டா அறியின்
    அவனுக்கு இவன்இல்லம் என்றென் றறிந்தும்
    அவனைப் புறம்பென்(று) அரற்றுகின் றாரே.
  • 3. நாடும் பெருந்துறை நான்கண்டு கொண்டபின்
    கூடும் சிவனது கொய்மலர்ச் சேவடி
    தேட அரிய சிறப்பில்லி எம்மிறை
    ஓடும் உலகுயி ராகிநின் றானே.
  • 4. இயம்புவன் ஆசனத் தோடு மலையும்
    இயம்புவன் சித்தக் குகையும் மடமும்
    இயம்புவன் ஆதாரத் தோடு வனமும்
    இயம்புவன் ஈரா றிருநிலத் தோர்க்கே.
  • 5. முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
    அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
    அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
    சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.
  • 6. அகமுக மாம்பீடம் ஆதாரம் ஆகும்
    சகமுக மாம் சத்தி ஆதனம் ஆகும்
    செகமுக மாம் தெய்வ மேசிவம் ஆகும்
    அகமுகம் ஆய்ந்த அறிவுடை யோர்க்கே.