ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 1. குருமட தரிசனம்

பதிகங்கள்

Photo

முகம்பீட மாம்மட முன்னிய தேகம்
அகம்பர வர்க்கமே ஆசில்செய் ஆட்சி
அகம்பர மாதனம் எண்ணெண் கிரியை
சிதம்பரம் தற்குகை ஆதாரந் தானே.

English Meaning:
Lord is in Guru`s Monastery

The Guru-face is Lord`s pedestal
The monastery is Lord`s Holy Land;
The Holy Assembly of blemishless vision
Is Lord`s abode;
The heart that performs the Sixteen worships inside
Is Lord`s sacred throne;
The Adharas within
Are Lord`s astral cave.
Tamil Meaning:
குருமடத்தில் முதன்மையாக அமைந்துள்ள பீடம், சிவபெருமானுடைய முகம். மடாலயம் உயிர்களால் நினைக்கப் படுகின்ற சிவனுடைய திருமேனி. திருமடத்தில் உள்ள பல உயிர்ப் பொருட்கள், உயிரல் பொருட்கள், சிவனுடைய வியாபகத்துள் அடங்கியுள்ள உயிர்களும், உயிர் அல்லாதனவும் ஆகிய உலகங்கள். குருமூர்த்தியின் ஆட்சி, சிவபெருமான் உயிர்களின் பாசத்தைப் போக்குதற்குச் செய்கின்ற செயல்கள். குருமூர்த்தியினுடைய உள்ளம், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் மேலான இருக்கை. குருமூர்த்தி தாம் இருப்பதாகக் கொண்டுள்ள குகை, சிவனுடைய இடமாகிய சிதாகாசம். ஆகவே, குருமூர்த்திக்கு அவர்தம் மாணவர் செய்யும் பதினாறு வகை முகமன்களோடுகூடிய வழிபாட்டுச் செயல்கள். உலகில் சிவபெருமானுக்கு அந்தணர் முதலியோர் அவ்வாறு செய்யும் வழிபாட்டுச் செயல்களே.
Special Remark:
``அகம்`` இரண்டில் முன்னது இடவாகு பெயராய், அதில் உள்ள பொருட்களைக் குறித்தது பரவர்க்கம் - ஏனைப் பொருட்கள். செய் - செயல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஆசு இன்மைக்கு ஏதுவான செயல்` என்க. `தேயம், காட்சி` என்பன பாடம் அல்ல. பரம் + ஆதனம் = பரமாதனம். எண் எண் - எட்டும் எட்டும்; பதினாறு. இஃது எண்ணாகு பெயராய் அத்துணை வழிபாட்டுச் செயல்களைக் குறித்தது எழுவாயாய் நின்று ``கிரியை`` என்னும் பயனிலையைக் கொண்டது. `குகையாகிய ஆதாரம்` என்க. குகையை `ஒடுக்கம்` என்பர்.
`பீடம் முகமாம்; பரவர்க்கம் அகம்; ஆட்சி செயல்; தற்குகை ஆதாரம் சிதம்பரம்; ஆகவே, எண்எண் முகமன் கிரியை` என இயைத்துக் கொள்க. ஈற்றடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிர் எதுகையுமாம்.
இதனால் குருமடமே சிவசொரூபமாதல் கூறப்பட்டது.