ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
    சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
    அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
    கமையறிந் தாருட் கலந்துநின் றானே.
  • 2. பாங்கமர் கொன்றைப் படர்சடை யானடி
    தாங்கு மனிதர் தரணியில் நேரொப்பர்
    நீங்கிய வண்ணம் நினைவுசெய் யாதவர்
    ஏங்கி உலகில் இருந்தழு வாரே.
  • 3. இருந்தழு வாரும் இயல்புகெட் டாரும்
    அருந்தவம் மேற்கொண்டங் கண்ணலை எண்ணில்
    வருந்தா வகைசெய்து வானவர் கோனும்
    பெருந்தன்மை நல்கும் பிறப்பில்லை தானே.
  • 4. தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
    பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
    காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
    நீரறி வாளர் நெடுமுகி லாமே.
  • 5. அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி
    பறியுடன் பாரம் பழம்பதி சிந்துங்
    குறியது கண்டும் கொடுவினை யாளர்
    செறிய நினைக்கிலர் சேவடி தானே.
  • 6. மன்னும் ஒருவன் மருவு மனோமய
    னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
    துன்னி மனமே தொழுமின் துணையிலி
    தன்னையும் அங்கே தலைப்பட லாமே.
  • 7. ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
    றாங்கார மற்ற அனுபவம் கைகூடார்
    சாங்காலம் உன்னார் பிறவாமை சார்வுறார்
    நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.