ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பதிகங்கள்

Photo

மன்னும் ஒருவன் மருவு மனோமய
னென்னின் மனிதர் இகழ்வரிவ் வேழைகள்
துன்னி மனமே தொழுமின் துணையிலி
தன்னையும் அங்கே தலைப்பட லாமே.

English Meaning:
Lord is Within You

The Only Being, the Eternal Being
Within you He dwells;
When you say so,
These ignorant men laugh low;
Poor folk! if they but seek Him in prayer within
Then shall they meet Him — the Peerless One.
Tamil Meaning:
அழிவிலனாகிய இறைவன் தன்னை நினைப்ப வரது நினைவே வடிவாய் விளங்குபவன் என்று வேதாகமங்கள் சொல்லவும் அதனை அறியாது இவ்வுலகத்தில் உள்ள அறிவிலிகள் அவனை நினையாது இகழ்ந்தொழிவார்கள். நீவிர் அங்ஙனம் செய்யாது மனம் பொருந்தி அவனை வணங்குங்கள். வணங்கினால், அப்பொழுதே ஒப்பற்ற ஒருவனாகிய அவனை அடைதல் கூடும்.
Special Remark:
``என்னில்`` என்பது, அதனை உணர்ந்து நினைதலே அவனைத் தலைப்படுதற்குக் காரணமாதலைக் குறித்தது. `மனிதர்` என்னும் விதப்பு, `மனிதத்தன்மை இலர்` என்னும் இகழ்ச்சிக் குறிப்பினது.
இதனால், அறிவிலும் ஒழுக்கமே சிறந்த சாதனமாதல் கூறப்பட்டது.