ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பதிகங்கள்

Photo

தூரறி வாளர் துணைவன் நினைப்பிலர்
பாரறி வாளர் படுபயன் தானுண்பர்
காரறி வாளர் கரந்து பிறப்பர்கள்
நீரறி வாளர் நெடுமுகி லாமே.

English Meaning:
Lord is Like Gentle Rain

Who seeks Finite Truth
They His friend are;
Who does not seek Him
They but know the Worldly Men`s Misery-Way,
Enveloped in darkness of bondage
In vain shall they be born again and again;
Who seeks Path True
To them, the Lord is like richly laden clouds
That drops gentle rain of Heavenly Grace.
Tamil Meaning:
தூர்ந்த அறிவினை உடையோர் தோன்றாத் துணை யாயுள்ள இறைவனை நினைக்கமாட்டாது யாதொரு பயனையும் எய்தார். தூல அறிவினை உடையோர் வருவதை அனுபவித்துக் கொண்டிருப்பர். மயக்க அறிவினை உடையோர் உள்ளதை `இல்லை` என்று சொல்லி மறைத்து, அதனால், பின் வறியராய்ப் பிறப்பர். அறத்தின் தன்மையை அறிந்த அறிவினை உடையோர் பெரிய மேகம் போலப் பலர்க்கும் கைம்மாறு கருதாது உதவி, அதனால், பின் செல்வராய்ப் பிறப்பர்.
Special Remark:
தூரறிவு, படுபயன் என்பன வினைத்தொகை. பாரறிவு, காரறிவு என்பன பண்புத்தொகை. தூர்ந்த அறிவாவது அறிவின்மை; பேதைமை. `துணைவனை` என்னும் இரண்டன் உருபு தொகுத்தல் பெற்றது. ``நினைப்பிலர்`` என்றது தன் காரியமும் உடன் தோன்ற நின்றது. `நாகரது பலி` என்பது போலும் ஆறாவதன் தொகை எனினுமாம். `காரறிவு, மயக்க அறிவு` என்பதனை, ``களவென்னும் காரறிவாண்மை``1 என்பது பற்றியும் உணர்க. நீர் - நீர்மை. நீர்மையை அறியும் அறிவினை ஆளுதல் உடையார்` என்க. ஆக்கம் உவமை குறித்து நின்றது. `ஆவரே` என்னாது `ஆமே` என்றது ஆரிட அமைதி. ``கரந்து`` என்றதனால், `வறியவராய்ப் பிறப்பர்` என்பது பெறப் பட்டது. படவே, முகில்போல்வார் செல்வராய்ப் பிறத்தல் கூறப்பட்டதாம்.
இதனால், அவரவர் அறிவு நிலைக்கு ஏற்பவே அவரவரது ஒழுக்கம் உண்டாமாறு கூறுமுகத்தால், மெய்யறிவினை யுடையோர் சிவ பத்தி யுடையராய் ஒழுகல் வேண்டும் என்பது கூறப்பட்டது.