ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 18. நிராசாரம்

பதிகங்கள்

Photo

சிமையங்க ளாய்நின்ற தேவர்கள் ஆறு
சமையங்கள் பெற்றனர் சாத்திரம் ஓதி
அமையறிந் தோம்என்பர் ஆதிப் பிரானும்
கமையறிந் தாருட் கலந்துநின் றானே.

English Meaning:
Who Attained Divine Tranquillity

The Heavenly Beings, immortal as the mountain Himalayas,
Received the Darshanas that are Six;
``We learned them all and attained the Other World``
—Thus quote they;
But, in sooth,
The Primal Lord is in intimacy within
Of those that have Divine Tranquillity attained.
Tamil Meaning:
மலைபோன்றவர்களாக மதிக்கப்படுகின்ற தேவர் பலருக்குரிய புறச்சமயங்களைத் தமக்கு உரியனவாகக் கொண்டோர் அவற்றின் நூல்களை ஓதி, `அதனால், நிறை நிலையை அறிந்து விட்டோம்` என்று பெருமை பேசிக்கொள்வார்கள். ஆயினும், முதற் கடவுளாகிய சிவபெருமான் அவர்களது உள்ளத்தில் தோன்றாது மறைந்து, பொறையுடைமை, வெகுளாமை முதலிய ஒழுக்கங்களை உடையவரது உள்ளத்திலே விளங்கி நிற்கின்றான்.
Special Remark:
சிமயம் - மலை. ஆக்கம், உவமை குறித்து நின்றது. `மலைபோல்வாராக மதிக்கப்படுதல் அறிவு நிரம்பாதாரால்` என்க. `இமையங்கள்` என்பது பாடமன்று. ``சிமையம், சமையம்`` என்ப வற்றில் அகரத்திற்கு ஐகாரம் போலியாய் வந்தது. அமை, முதனிலைத் தொழிற் பெயர். அமைதல் - நிரம்புதல். கமை - பொறை. இது மற்றைய ஒழுக்கங்கட்கு உபலக்கணம். `புறச்சமய நூல்களையே உண்மை நூல்கள் என மயங்கினாராயினும், அவை பற்றிப் பிற சமயங்களைப் பழித்து நிற்றலை விடுத்து, அவை கூறும் ஒழுக்கத்தை உடைய ராயினார்க்குச் சிவன் அருள்புரிவன்` என்றவாறு. இதனானே சிவ நூலை ஓதினார்க்கும் இது குறிப்பாற் கூறப்பட்டவாறு அறிக.
இதனால், நூல்களை ஓதியவழியும் ஒழுக்கம் இல்வழிப் பயன் இன்றாதல் கூறப்பட்டது. இதனை,
``ஓதலின் நன்றே வேதியர்க் கொழுக்கம்`` 1
``மறப்பினும் ஓத்துக்கொளலாகும்; பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்`` 2
என உயர்குலத்தார்மேல் வைத்தும்,
``ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை`` 3
`ஓதியுண்ர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையிற் பேதையார் இல்`
எனப் பொதுப்பட வைத்தும் பிறவிடங்களிலும் கூறுமாறு அறிந்து கொள்க.