ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்

பதிகங்கள்

Photo

தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

English Meaning:
The Past is Inexorable—Seek the Fair Land

Nothing there is,
Except by your past deeds come;
The heavens cannot decree otherwise;
And so by Muladhara Way
I sought the Lord within the head;
And what I did afore,
Took me to the Fair Land of Bliss.
Tamil Meaning:
ஒவ்வோர் உயிரும் தான் தான் முற்பிறப்பில் செய்த வினையின் பயனைத்தான் இப்பிறப்பில் அனுபவிக்கின்றதே தவிர, இப்பிறப்பில் சிலர் அவ்வுயிர்கட்கு நன்மை தீமைகளைப் புதியன வாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றார்கள் இல்லை. (ஆகவே, அவைகளைப் பிறர் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாகக் கருதி அவர்களை விரும்புதலோ, வெறுத்தலோ செய்தால் அச்செயல்களே அடுத்த பிறப்பிற்குக் காரணமான ஆகாமிய வினையாய்விடும். இதை உணர்ந்த நான் எனது முன் வினையின் பயனைக் கூட்டுகின்ற முதல்வன் என் தலையில் எழுதிய எழுத்துப்படியே இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் பொழுதெல்லாம் அவைகளை அவனது அருளாகவே கருதி அனுபவித்ததல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொண்டதில்லை. அவ்வாறு செய்த எனது செயல் எனது நன்மைக்குச் சிறந்ததொரு காரணமாயிற்று.
Special Remark:
`எனது நண்மை` என்றது, வினைத் தொடர்ச்சி அறுபட்டதை, ``தான்`` என்றது உயிர்களைப் பொதுப்படச் சுட்டியது. விதி - வினை. ``வழி`` என்றது பயனை. `அனுபவித்தல் அல்லால்` என ஒரு சொல் வருவிக்க. ``வான்`` என்பது `வெளி` என்னும் பொருட்டாய்ப் புறத்துள்ளாரைக் குறித்தது. மாட்டு - தொடர்பு. `சென்னியில் குறித்த வழியே` என்க. சென்று - செல்லாநின்று; என்பது, `செல்லும் பொழுது` என்றபடி ``செய்தது`` எனப் பொதுப் படக் கூறினாராயினும், ``கோன் முன்னம் குறித்த வழியே சென்றேன்`` என்றதனால் அது அவன் அருள் வழி நின்றதையே குறித்தது. நிலம் - நிலைக்களம். அது, `சிறந்த காரணம்` எனப் பொருள் தந்தது. நாயனார் சாத்தனூரில் பாதுகாப்பில் வைத்த தம் மூலன் உடம்பு காணாமற் போனதையும், தாம் மூலன் உடம்பிலே இருக்க நேர்ந்ததையும் சிவன் அருளாகவே கருதி ஏற்றமை நினைக்கத்தக்கது.
இதனால், ஊழின் பயனை அனுபவிக்கும்பொழுது அதனை, அவன் அருள்` என்று அனுபவிக்கின் அஃது உடல் ஊழாய்க் கழிதலோடு, ஆகாமியமும் விளையாது` என்பது கூறப்பட்டது.
``சிவாய நமஎன்று சிந்தி திருப்பார்க்கு
அபாயம் ஒருநாளும் இல்லைனா;- உபாயம்
இதுவே மதியாகும்; அல்லாத எல்லாம்
விதியாய் மதிய்யா விடும்``*
என்ற ஔவையார் வாக்கு இங்கு நினைவு கூரத்தக்கது. இவ்வெண்பாவில் ``அபாயம்`` என்றது ஊழின் தாக்குதலும், அதனால் விளையும் ஆகாயமியமுமாம். ``விதியை மதியால் வெல்லலாம்`` என்னும் பழமொழியில் `மதி` எனப்பட்டது `சிவாயநம` எனச் சிந்திதிருப்பதே எனவும், அஃது அல்லாத வழியெல்லாம் அந்த ஊழ் உண்டாக்கும் மதியே` எனவும் ஔவையார் விளக்கியிருத்தல் அறியத்தக்கது. ஊழ்வினை நன்மையாகவோ, தீமையாகவோ வந்து விளையும்பொழுதெல்லாம் அதனைச் ``சிவாயநம`` என்று சொல்லி ஏற்க வேண்டும் என்கின்றார் ஔவையார்.