ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 6. பஞ்சாக்கரம் - சூக்குமம்

பதிகங்கள்

Photo

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனை
ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்
தெளியவே ஓதின் சிவாயநம என்னும்
குளிகையை இட்டுப்பொன் னாக்குவான் கூட்டையே.

English Meaning:
Sivaya Nama is Alchemic

In slighting terms they speak of our Lord;
With thoughts centering on the Light
And hearts melting in Love
Let them chant His name;
With the alchemic pill of Sivaya Nama
He will turn thy body gold.
Tamil Meaning:
எவராலும் மறுக்க ஒண்ணாத உண்மையை எளிய மக்கள் மிக எளிதாக உடன்படாது மறுத்து வாதிடுவர். அவர் அவ்வாதத்தினை விட்டு அஞ்ஞான இருளை அகற்றும் ஞான ஒளியாகிய எங்கள் சிவபெருமானை நினைந்து உருகுகின்ற மனத்தை உடையவராய்க் கணிப்பார்களாயின. அப்பெருமான் அந்த, `சிவாயநம` என்னும் குளிகையினால் அவர்களது உயிரை மட்டுமன்று; உடம்பாகிய செம்பையே பொன்னாக்கி விடுவான்.
Special Remark:
`அப்பேற்றினை அவர்கள் பெறுகின்றிலர்` என்பது குறிப்பெச்சம். குளிகை பிற உலோகங்களைப் பொன்னாக்கும் இரச மணி. இதனைச் செய்யும் முறையை அக்காலத்தில் சித்தர்கள் அறிந் திருந்தனர். பிற உலோகங்களைப் புடம் இட்டு உருக்கிப்பதம் அறிந்து இக்குளிகையைச் சேர்த்தால், அந்த உலோகங்களில் உள்ள வேற்றுப் பொருட்கள் நீங்கி அவை பொன்னாய் ஒளிரும். கூடு - உடம்பு. ``கூட்டையே`` என்னும் தேற்றேகாரத்தால் உயிரை அதற்கு முன்பே பொன்னாக்குதல் பெறப்பட்டது. உயிர் ஆணவத்தால் அறிவையிழந்து களிம்பினால் ஒளியிழந்து நிற்கின்ற செம்புபோல் உள்ளது. திருவைந்தெழுத்துக் கணிப்பினால் ஆணவம் நீங்கி விட்டால், இரச குளிகையால் களிம்பு நீங்கிச்செம்பு பொன்னாய் ஒளிர்வது போல உயிர் சிவமாய் விளங்கும். உயிர் சிவமாயின், அதன் உடம்பும் சிவகாயமேயாம். இதனை மேலேயும் சில இடங்களில் கூறினார்.8
மேல், ``நகார முதலாகும்``9என்றதனை, `ஆகி உதித்து, ஏறி ஆகும்` என்றமையால் நகாரம் முதலாக அமைவது `தூலபஞ்சாக்கரம்` என்பதும், இங்கு, `உன்னி உருகும் மனதீதராய்த் தெளியவே ஓதின் கூட்டையே பொன்னாக்குவன்` என்றதனஆல், சிகாரம் முதலாக அமைவது `சூக்கும பஞ்சாக்கரம்` என்பது போந்தன.
இதனால் சூக்கும பஞ்சாக்கரத்தின் சிறப்புக் கூறப்பட்டது.
``சித்தம் ஒருக்கிச் சிவாய நம என்
றிருக்கினல்லால் ... ... ... ...
அத்தன் அருள்பெற லாமோ, அறிவிலாப்
பேதை நெஞ்சை``
``உனதருளால் - திருவாய்ப் பொலியச்
சிவாய நம என்று நீறணிந்தேன்,
தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே``3
``நானேயோதவம் செய்தேன், சிவாயநம எனப்பெற்றேன்``l
எனத் திருமுறைகளில் இச்சூக்கும பஞ்சாக்கரம் சிறுபான்மையாகச் சில இடங்களில் எடுத்தோதப்படுதல் காண்க.