ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 29. உபசாந்தம்

பதிகங்கள்

Photo

முத்திக்கு வித்து முதல்வன்றன் ஞானமே
பத்திக்கு வித்துப் பணிந்துற்றுப் பற்றலே
சித்திக்கு வித்துச் சிவபரம் தானாதல்
சத்திக்கு வித்துத் தனதுப சாந்தமே.

English Meaning:
Seeds Four

Seed of Mukti is Knowledge of Primal One;
Seed of Bhakti is intense adoration meek;
Seed of Siddhi it Self, Siva-Para Becoming;
Seed of Sakti is State of Upasanta.
Tamil Meaning:
``பற்றுக பற்றற்றான்; பற்றினை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு``*
என்றபடி, உலகப் பற்றை நீக்குதற்கு வழி சிவப்பற்றைக் கொள்ளுத -லாகும். அப்பற்று உண்டாதற்கு வழி, சிவனைக் குருலிங்க சங்கமங் -களை வழிபட்டு உறுதுணையாகப் பற்றுதலாகும். மனம் புலன்களின் வழி ஓடாது தன் வயப்படுதற்கு வழி யோகசமாதி. முத்திக்கு வழி சிவ ஞானம். அந்த ஞானம் வருதற்கு வழி உயிர் உபசாந்தத்தை அடைதலாம்.
Special Remark:
`இங்கு எடுத்துக்கொண்ட பொருள் முத்தியே` என்பது தோன்றுதற் பொருட்டு, `சிறப்புடைப் பொருளை முற்படக் கிளத்தல்` என்னும் முறைப்படி ``முத்திக்கு வித்து`` என்பதையே முன்னர்க் கூறினா -ராயினும் ஈற்றடிக்கு முன்னே கூட்டியுரைத்தல் கருத்தென்க. ``சத்தி`` என்றது ஞானத்தையே. `முத்திக்கு வித்து, சக்திக்கு வித்து` என்பவற்றைக் கூறுதலே கருத்தாயினும் அவை வலியுறுதற் பொருட்டு வேறு இரண்டை உடன் கூறினார். இஃது ஒப்புமைக் கூட்ட அணி பணிந்துற்றப் பற்றுதலுக்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. மனத்தை அது சென்றவிடத்தால் செலவிடாது* அடக்கித் தன் வயப்படுத்துதலே பெறற் கரிய பேறாகலின் அதனையே ``சித்தி`` என்றார். சிவபரம் - சிவமாகிய பரம் பொருள். தானாதல் - சமாதி. ``சிவம் பரம்`` என்றதனால், சிவ யோகமே குறிக்கப்பட்டதாம். உபசாந்தமாவது மாயேயங்கள் எல்லாம் நீங்கிய நிலை` என்பது முன்பே கூறப்பட்டது.
இதனால், `உபசாந்தம் ஞானத்தைப் பயக்க, ஞானம் வீடு பேற்றைத் தரும்` என்பது கூறப்பட்டது.