ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி

பதிகங்கள்

Photo

குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.

English Meaning:
The Blind Leading the Blind Together Fall

The blind (the unholy Guru), who lead the blind (foolish disciples)
Will into the eternal pit first fall;
Then the foolish disciples too fall;
And in the end in disorder together they fall,
—The blind that lead and the blind that are led—
Indistinguishably, jumbled together.
Tamil Meaning:
குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார்களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டு கின்றோம்` என்றுசொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)
Special Remark:
``முன்பின் அறவே`` என்பது முதலாக உள்ளவற்றை முதலில் கொண்டு உரைக்க.
இம்மந்திரம் ஒட்டணியாய் நின்றது.
`அஞ்ஞானிகள் சிலர் தங்களைப் போலவே அஞ் ஞானிகளாய் உள்ள சிலரைக் குரவராக மதித்து அடைவார்களாயின் இருவரும் பிறவிக் குழியில் விழுவதைத் தவிர வீடுபேறாகிய கரையை அடையார்; அவருள்ளும் குரவராய் நின்றவரே முதலில் பிறவிக் குழியில் வீழ்வர்` என்பது இதனால் குறிக்கப்பட்ட பொருள்.
ஆதல் - ஒன்றாதல். ``ஆகில்`` எனப் பின்னர் வருதலின் நான்காம் அடியில் முதற்கண் நின்ற குருடர் `ஆகிய குருடர்` என்பது விளங்கிற்று. அதன்கண் வந்த உம்மை இறந்தது தழுவிய எச்சம். முன் தந்திரத்தில் போந்த ``குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்`` என்னும் மந்திரத்தை இதனோடு ஒப்பிடுக.
இதனால், அசற்குரவராயினார் பிறரையும் கெடுத்தல் கூறப்பட்டது.