ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி

பதிகங்கள்

Photo

உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

English Meaning:
The Unholy Guru Has Virtues None

A fool he is,
Wisdom none he has;
Truth he has realized not;
Versed is he not in the way
Of Vedas and Agamas;
Humility he has none;
Of God he speaks ill;
Worldly life is his sole concern;
He, verily, is the Guru unholy.
Tamil Meaning:
இதன் பொருள் வெளிப்படை.
Special Remark:
``அசற்குருவாய்`` என்னும் பயனிலையை ``மூடன்`` முதலிய எல்லாவற்றோடும் தனித்தனி கூட்டுக. ``உணர்வு`` என்றது நல்லுணர்வை. `ஒன்று` இரண்டும் `சிறிது` என்னும் பொருளன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுக்கப்பட்டன. உண்மை - பொருள்களின் உண்மையியல்பு. `தத்துவம்` எனப்படுவது இதுவே. கணு - எல்லை, என்றது ஏகதேசத்தை. எனவே, `சற்குரவ ராவார் வேதாகமங்களை முற்ற உணர்ந்திருப்பர்` என்பது போந்தது. பரநிந்தை, புறங்கூறல். அணு - உயிர். அதற்கு இயற்கையாய் உள்ளது அறியாமை. அஃதாவது உணர்த்தினும் உணர மாட்டாமையாம். ``கொடிறும் பேதையும் கொண்டது விடா`` (தி.8 போற்றித் திருவகவல், 63) என்று அருளிச் செய்தது காண்க. `கூறப்பட்ட குற்றங்களுள் ஒன்றையே உடையராயினும் அவர் சற்குருவாகாது, அசற்குரு வேயாவர்` என்றற்கு `அசற்குருவாமே` என்பதனைத் தனித்தனி கூட்டிக் கொள்ள வைத்தார். அசத்தை உணர்த்துவோன் அசற்குரு.
இதனால், `அசற்குருவாவரிடத்துக் காணப்படும் குற்றங்கள் இவை` என்பது கூறி, அவர் `இன்னார்` என்பது உணர்த்தப்பட்டது.